டில்லி:

நாடாளுமன்ற தேர்தல் தோல்வியை அடுத்து, கர்நாடகா மாநில காங்கிரஸ் கமிட்டி கலைக்கப் படுவதாக அகில இந்திய காங்கிரஸ் தலைமை அதிகாரப்பூர்வமாக இன்று அறிவித்து உள்ளது.

கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியை  அனைத்து மட்டத்திலும் வளர்க்கும் நோக்கில், எதிர்கால திட்டமிடலுக்காக கட்சியில் சீர்திருத்தம் செய்யப்பட்டு வருகிறது. அதன்படி கர்நாடக மாநிலத்தில் கட்சியை வளர்க்கும் வகையில் திறமையான தலைவர்களை நியமனம் செய்யும் வகையில் மாநில காங்கிரஸ் கமிட்டி கலைக்கப்பட்டுள்ளது.

நடைபெற்று முடிந்த 17வது லோக்சபா தேர்தலில் கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடைந்தது. 2 இடங்களில் மட்டுமே வெற்றிப்பெற்றது. இதன் காரணமாக மாநில காங்கிரஸ் மீது கட்சியின் தலைமை அதிருப்தியில் இருந்து வந்தது.

இந்த நிலையில், கர்நாடக மாநில காங்கிரஸ் கமிட்டியை கலைக்க அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி  உத்தரவிட்டுள்ளது.

இது குறித்து காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் கே.சி. வேணுகோபால் வெளியிட்ட அறிக்கையில், ‘கர்நாடகா மாநிலத்தின் காங்கிரஸ் கமிட்டி கலைக்கப்படுகிறது. அதே சமயம் மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவர் மற்றும் செயல் தலைவர் ஆகியோர் தொடர்ந்து பதவியில் நீடிப்பார்கள்’ என கூறப்பட்டுள்ளது.