சென்னை: மத்தியஅரசு ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ முறை குறித்து அரசியல் கட்சிகளின் கருத்துக்களை கோரியுள்ள நிலையில்,   ஆதரவு தெரிவித்து எடப்பாடி பழனிசாமி இந்திய சட்ட ஆணையத்துக்கு கடிதம் எழுதியுள்ளார்.

பார்லிமென்ட், சட்டசபைக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தும் வகையில், ‘ ஒரே நாடு, ஒரே தேர்தல்’ என்ற நடைமுறையை கொண்டு வர மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது. இதற்கு இந்திய தேர்தல் ஆணையமும் பச்சைக்கொடி காட்டி உள்ளது. இதையடுத்து, இதுதொடர்பாக ஆய்வு செய்யும்படி, தேசிய சட்ட ஆணையத்தை, மத்திய சட்ட அமைச்சகம் கேட்டு கொண்டுள்ளது. அதன்படி, அரசியல்கட்சிகளிடம் சட்ட ஆணையம் கருத்து கேட்கிறது.

2024ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், மத்தியஅரசின் இந்த நடவடிக்கை புதிதாக பதவி ஏற்றுள்ள மாநிலங்களில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. பாஜக அல்லாத மாநில அரசுகள் இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

இந்த நிலையில்,  ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ முறைக்கு ஆதரவு தெரிவிப்பதாக இந்திய சட்ட ஆணையத்துக்கு அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.  ஏற்கனவே  2021ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தல் நிறைவு பெற்றதில் இருந்து ஈபிஎஸ், பலமுறை 2024ஆம் ஆண்டு ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற முறையை மத்திய அரசு அமல்படுத்த உள்ளதாக கூறி வந்தார்.  தற்போது திமுக ஆட்சியை விமர்சிக்கும்போதே இந்த கருத்தை வலியுறுத்தி வருகிறார்.

இந்த நிலையில், கடந்த மாதம்  இந்திய சட்ட ஆணையம் ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ என்ற முறைக்கு கருத்து கேட்டு அதிமுகவிற்கு கடிதம் ஒன்றை அனுப்பி இருந்தது. இதற்கு ஜனவரி 16ஆம் தேதிக்குள் பதில் அளிக்கவும் அதில் குறிப்பிட்டிருந்தது.

இதற்கு அதிமுக சார்பாக பதிலளித்த எடப்பாடி பழனிசாமி, “ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற முறையை கொண்டு வருவதற்கு அதிமுக ஆதரவு தெரிவிக்கிறது” என பதில் அனுப்பியுள்ளார். ஏற்கனவே 2024ஆம் ஆண்டு சட்டப்பேரவைக்கும் தேர்தல் நடக்கும் என்று ஈபிஎஸ் கூறியதைப் போல சட்ட ஆணையத்தின் கடிதம் இருந்ததால் முதல் கட்சியாக அதிமுக ஆதரவு தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

அதிமுகவில் ஓபிஎஸ் ஈபிஎஸ் தரப்பினர் இடையே ஒற்றை தலைமைக்கான யுத்தம் தொடர்ந்து கொண்டிருப்பதால், “நாங்கள் தான் உண்மையான அதிமுக” என்று நிரூபிக்கும் விதமாக ஈபிஎஸ் தரப்பில் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. சட்ட ஆணையம் அனுப்பிய கடிதத்தில் அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி என இருந்தது குறிப்பிடத்தக்கது.

ஒரேநாடு ஒரேதேர்தல்: எடப்பாடி பழனிசாமியை அதிமுக பொதுச்செயலாளர் என அங்கீகரித்து மத்திய சட்ட ஆணையம் கடிதம்!