சென்னை: அதிமுக பொதுக்குழு விவகாரம் தொடர்பான  உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து நத்தம் விஸ்வநாதன் உச்சநீதிமன்றத்தில் மேல்முறை யீடு செய்துள்ளர். ஏற்கனவே எடப்பாடி பழனிச்சாமி மேல்முறையீடு செய்துள்ள நிலையில், தற்போது முன்னாள் அமைச்சரும், எடப்பாடி ஆதரவாளருமான நத்தம் விஸ்வநாதனும் மேல்முறையீடு செய்துள்ளார்.

கடந்த ஜூன் 23-ஆம் தேதி அதிமுக பொதுக்குழு கூட்டம்  சென்னையில் நடைபெற்றது. முன்னதாக அதிமுகவில் ஒற்றை தலைமை கோஷம் தீவிரமடைந்ததால், அதை ஏற்க மறுத்த ஓபிஎஸ், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்து தனக்கு சாதகமான தீர்ப்பை பெற்றார். தீர்ப்பில்,  ஒப்புதல் அளிக்கப்பட்ட தீர்மானத்தைத் தவிர புதிய தீர்மானம் நிறைவேற்ற தடை விதித்து, சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி துரைசாமி தலைமையிலான டிவிஷன் பெஞ்ச் உத்தரவிட்டது. மேலும்,  செயற்குழு ஒப்புதல் அளித்த 23 தீர்மானம் தவிர பிற எந்தத் தீர்மானமும் நிறைவேற்றவோ, விவாதிக்கவோ கூடாது என உத்தரவிட்டது.

இந்த உத்தரவை எதிர்த்து, எடப்பாடி கே.பழனிசாமி தரப்பில் உச்சநீதிமன்றத்தி மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளார். அதன் தொடர்ச்சியாக இபிஎஸ் ஆதரவாளர் நத்தம் விஸ்வநாதன் இன்று உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு மனுவை தாக்கல் செய்துள்ளார்.