சென்னை: அதிமுக செயற்குழு, பொதுக்குழு கூட்டம் இன்று சென்னையில் கூடுகிறது. இதையொட்டி அதிமுக முன்னணியினர் மதுரவாயல் பகுதியில் கூடி உள்ளனர்.

சென்னையில் அதிமுக பொதுக்குழு மற்றும் செயற்குழுக் கூட்டம் இன்று நடைபெறுகிறது.  சென்னை மதுரவாய் அடுத்த வானகரத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் இந்த கூட்டம் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. இந்த கூட்டத்தில் அதிமுகவில் ஏற்பட்டுள்ள உள்கட்சி பிரச்சினை, 2024 நாடாளுமன்ற தேர்தல், தேர்தல் கூட்டணி உள்பட பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதிக்கப்பட உள்ளது. பா.ஜ.க.வுடனா கூட்டணி முறிவுக்கு பிறகு பொதுத்தேர்தலை சந்திக்க இருப்பது குறித்தும், உறுப்பினர்கள் சேர்க்கையை தீவிரப்படுத்துதல் குறித்தும், தேர்தல் பரப்புரைகள், தேர்தல் பணிகள் உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்தும் தீவிரமாக ஆலோசிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக 40 இடங்களையும் கைப்பற்றுவது குறித்தும் தீர்மானம் நிறைவேற்றப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. இன்று நடைபெறும் கூட்டத்தின் சில முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

மேலும் மிக்ஜாம் புயலால சென்னையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதற்கு தமிழ்நாடு அரசு போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காதது தான் காரணம் என அதிமுக தரப்பில் தெரிவிக்கப்படும் நிலையில், தமிழ்நாடு அரசுக்கு எதிராக தீர்மானம் கொண்டு வரப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. முக்கியமாக நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணி நிலைப்பாட்டை குறித்தும் தீர்மானம் நிறைவேற்றப்படும் என அதிகார வட்டங்கள் தெரிவிக்கின்றன.

இன்று நடைபெறும் பொதுக்குழுவில் முழுக்க முழுக்க எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளர்கள் மட்டுமே கலந்துக்கொள்கின்றனர். அதிமுக முன்னாள் பொதுச் செயலாளர் மற்றும் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைவுக்கு பின் நடைபெற்ற பொதுக்குழு எவ்வளவு எதிர்ப்பார்ப்பை கிளப்பியதோ, அதே அளவு எதிர்ப்பார்ப்பு இன்று நடைபெறும் பொதுக்குழு மற்றும் செயற்குழுவு ஈர்த்துள்ளது.

இதுதொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், “அ.தி.மு.க. செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம், கழக சட்ட விதிகள் 19(vii) மற்றும் 25(ii)-ன் படி, வரும் 26.12.2023 – செவ்வாய் கிழமை காலை 10.35 மணிக்கு சென்னை, வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரி வெங்கடாசலபதி பேலஸ் மண்டபத்தில் கழக அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் தலைமையில் நடைபெற உள்ளது.

கழக செயற்குழு மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவருக்கும் தனித்தனியே அழைப்பிதழ் அனுப்பி வைக்கப்படும். உறுப்பினர்கள் ஒவ்வொருவரும் தங்களுக்கு அனுப்பப்படும் அழைப்பிதழுடன் தவறாமல் வருகை தந்து, கழக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்” என தெரிவித்துள்ளார்.