சென்னை: நடைபெற்ற முடிந்த ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலின்போது, தேர்தல் நடத்தை விதிமீறியதாக முதலமைச்சர் ஸ்டாலின் மீது புகார் கூறி அதிமுக வழக்கறிஞர் இன்பதுரை கடிதம் எழுதி உள்ளார்.

காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் திருமகன் ஈவேரா மரணத்தைத் தொடர்ந்து, பிப்ரவரி 27ந்தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. தேர்தலில் பதிவான வாக்குகள் மார்ச் 2ந்தேதி எண்ணப்பட்டது. இதில், , திமுக கூட்டணி சார்பில் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், அதிமுக கூட்டணி சார்பில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ். தென்னரசு ஆகியோர் உட்பட தேமுதிக, நாம் தமிழர் கட்சி, சுயேட்சைகள் என மொத்தம் 77 வேட்பாளர்கள் தேர்தல் களத்தில் போட்டியிட்ட நிலையில், காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் அமோக வெற்றிபெற்றார். ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் 1,10,556 வாக்குகளும், அதிமுக வேட்பாளர் தென்னரசு 43,981 வாக்குகளும் பெற்று 66,575 வாக்குகள் வித்தியாசத்தில் திமுக கூட்டணி அமோக வெற்றி பெற்றது. ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்  10ந்தேதி பதவி ஏற்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த நிலையில்,   அதிமுக வழக்கறிஞர் இன்பதுரை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் பிரச்சாரத்தின் போது தேர்தல் நடத்தை விதிமீறல் செய்துவிட்டதாக கூறி தேர்தல் ஆணையத்திற்கு புகார் கடிதம் அனுப்பியுள்ளார். அதில், தேர்தல் நடைபெறுவதற்கு இரண்டு நாட்கள் முன்பு கடந்த பிப்ரவரி 25-ஆம் தேதி அன்று நடந்த தேர்தல் பிரச்சாரத்தின் போது, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பட்ஜெட்டில் பெண்களுக்காக மாதந்தோறும் ஆயிரம் வழங்கும் திட்டம் அறிவிக்கப்படும் என பேசி இருந்ததாகவும், இது தேர்தல் நடத்தை விதிமீறல் என்றும், இது தொடர்பாக மாவட்ட தேர்தல் அதிகாரிக்கு ஏற்கனவே அவர் புகார் அளித்திருந்தும், ஆனால் அவர்கள் எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதனால் தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் மாவட்ட தேர்தல் அதிகாரி மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.