வேலூர்:

வேலூர் மக்களவை தொகுதி தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் இன்று தொடங்கி உள்ள நிலையில், அதிமுக கூட்டணி கட்சிகள் சார்பில் போட்டியிடும் புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.

பணப்பட்டுவாடா காரணமாக நிறுத்தி வைக்கப்பட்ட வேலூர் மக்களவைக்கான தேர்தல் ஆகஸ்டு 5ந்தேதி நடைபெற உள்ளது. இதையடுத்து, இன்று  வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வேட்பு மனுத்தாக்கல் தொடங்கியது.

வேட்புமனுத் தாக்கலின் தொடக்க நாளான இன்று அதிமுக சார்பில் போட்டியிடும் புதிய நீதிக்கட்சி யின் தலைவர் ஏ.சி.சண்முகம் தமது வேட்புமனுவை தாக்கல் செய்தார். மாவட்ட ஆட்சியரும், தேர்தல் நடத்தும் அதிகாரியுமான சண்முகசுந்தரத்திடம் தமது மனுவை வழங்கினார். அவருடன் தமிழக அமைச்சர்  கே.சி.வீரமணியும் சென்றார்.

வேட்புமனு தாக்கல் காரணமாக, வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை சுற்றிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.