புதுடெல்லி:
மேற்குவங்க மாநிலம் சிங்கூரில் நானோ கார் தொழிற்சாலைக்காக கையகப்படுத்திய 1000 ஏக்கர் விவசாய நிலத்தை 12 வாரத்தில் திருப்பி கொடுக்க டாடாவுக்கு உச்ச நீதிமன்றம்  அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த தீர்ப்பு மேற்கு வங்க முதல்வருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. நான் நிம்மதியாக இறப்பேன் என்று கூறி உள்ளார்.

சிங்குர் போராட்டத்தின்போது மக்கள்
சிங்குர் போராட்டத்தின்போது மக்கள்

டாடா நிறுவனம் குறைந்த விலையில் நானோ கார் தயாரிப்பதற்காக மேற்குவங்க மாநிலம் சிங்கூரில் 1000 ஏக்கர் விவசாய நிலத்தை அப்போதை மார்க்சிஸ்ட் அரசு கையகப்படுத்தியது.
முதல்வர் புத்ததேவ் பட்டாச்சார்யா விவசாயிகளின் கடும் எதிர்ப்பையும் மீறி இந்த நடவடிக்கையை மேற்கொண்டார். மம்தா தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் தலைமையில் போராட்டங்கள் நடந்தன. இதனையடுத்து டாடா நிறுவனம் தனது தொழிற்சாலையை குஜராத்திற்கு மாற்றியது.
ஆனாலும்,  கையகப்படுத்தப்பட்ட நிலத்தை திருப்பி வழங்க டாடா நிறுவனம் மறுத்துவிட்டது. வேறு பணிக்கு இந்த நிலம் பயன்படுத்தப்படும் என கூறியது.
2011ல் மேற்குவங்க சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெற்று மம்தா முதல்வராக பதவி ஏற்றார். அப்போது புதிய சட்டத்தை கொண்டு வந்து விவசாயிகளிடம் இருந்து கையகப்படுத்திய 1000 ஏக்கர் நிலங்களை டாடாவிடம் இருந்து திரும்ப பெற்றார். இதை எதிர்த்து கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் டாடா சார்பில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், ‘‘மாநில அரசு சட்டப்பேரவையில் மசோதா நிறைவேற்றிய பின் அதை எதிர்த்து அப்பீல் செய்வது சட்டவிரோதம்’’ என்று டாடாவுக்கு எதிராக தீர்ப்பு வழங்கியது.
mamta
இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் டாடா நிறுவனம் அப்பீல் செய்தது. இந்த வழக்கு விசாரணையில் கடந்த மே மாதம் உச்ச நீதிமன்றம் தீர்ப்பை ஒத்தி வைத்தது. நேற்று இந்த வழக்கில் தீர்ப்பு கூறப்பட்டது.
நீதிபதிகள் கோபால கவுடா, அருண் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய பெஞ்ச் இந்த தீர்ப்பை வழங்கியது. அதன் விவரம்:
தனியார் நிறுவனத்துக்கு சாதகமாக அரசு அதிகாரம் அதிகளவில் பயன்படுத்தப்பட்டுள்ளது. மாநில அமைச்சரவை முடிவை பயன்படுத்தி நிலம் கையகபடுத்தப்பட்டதில் தவறுகளும், குளறுபடிகளும் உள்ளது . எனவே டாடா நிறுவனம் கையகப்படுத்திய 1000 ஏக்கர் நிலத்தை விவசாயிகளிடம் திரும்ப ஒப்படைக்க வேண்டும். இந்த நிலத்தை கடந்த 10 ஆண்டுகளாக இழந்திருந்த விவசாயிகளுக்கு வழங்கிய இழப்பீட்டை திரும்ப கேட்கக் கூடாது.  12 வாரங்களுக்குள் அவர்களுக்கு நிலத்தை திரும்ப ஒப்படைக்க வேண்டும். எனவே 10 வாரங்களுக்குள் இதுதொடர்பான ஆய்வு மற்றும் சர்வேக்களை நடத்தி முடிக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.
இந்த வழக்கில் நில உபயோகம் பொதுபயன் பாட்டுக்காகவா, இல்லையா என்பதில் நீதிபதிகளுக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.
இந்த தீர்ப்பு பற்றி மே,வ. முதல்வர் மம்தா கூறுகையில், இனி நிம்மதியாக இறப்பேன் என்றார்.