சென்னை

பிரதமர் மோடி மீண்டும் அடுத்த மாதம் தமிழகத்துக்கு வருவார் எனத் தமிழக பாஜக தெரிவித்துள்ளது.

நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு பிரதமர் மோடி நாடு முழுவதும் தீவிர சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். தமிழகத்திற்கு இந்த மாதத்தில் மட்டும் இரண்டு முறை சுற்றுப்பயணம் மேற்கொண்ட  நிலையில் பிரதமர் மோடி மீண்டும் அடுத்த மாதம் சென்னைக்கு வரவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

அவர் சென்னை புறநகர் பகுதியில் நடைபெறும் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையின் ‘என் மண் என் மக்கள் ‘ நிறைவு விழாவில் பங்கேற்க உள்ளதாக பாஜக வட்டாரங்கள் கூறுகின்றன.

கட்ந்த ஆண்டு அண்ணாமலை தனது பாத யாத்திரையை ராமேஸ்வரத்தில் தொடங்கிய போது யாத்திரையை அமித்ஷா தொடங்கி வைத்தார். இந்த நடைப் பயணம் தமிழகம் முழுவதும் பல்வேறு கட்டமாக நடைபெற்று பிப்ரவரி 2-வது வாரத்தில் சென்னையில் நிறைவு பெறுகிறது.

இந்த நிறைவு விழாவைச் சென்னை புறநகர்ப் பகுதியில் நடத்துவதற்காக பாஜக ஆயத்தமாகி வருவதாகக் கூறப்படுகிறது. விரைவில் யாத்திரை நிறைவு விழா மற்றும் மாநாடு நடைபெறும் இடம் குறித்து இறுதி செய்யப்பட்டு, பிரதமர் மோடியின் வருகை குறித்த தகவல் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்று பாஜகவினர் தரப்பில் சொல்லப்படுகிறது.