ஓட்டப்பிடாரம்:

4சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கான தேர்தல் பிரசாரம் சூடுபிடித்துள்ள நிலையில் கடந்த 2 நாட்களாக ஓட்டப்பிடாரம் தொகுதியில் வாக்கு சேகரித்து வரும் மு.க.ஸ்டாலின்  சட்டமன்ற இடைத் தேர்தல்களில் திமுக வெற்றி பெற்று  ஆட்சி அமைக்கும் என்று நம்பிக்கை தெரிவித்து உள்ளார்.

கடந்த 1ந்தேதி முதல் ஒட்டப்பிடாரம் தொகுதியில் முகாமிட்டுள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்,  அங்கு போட்டியிடும்  தி.மு.க. வேட்பாளர் சண்முகையாவை ஆதரித்து தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். நேற்று  ஸ்பிக் நகர், கோரம்பள்ளம், தங்கம்பாள்புரம், சேர்வைக்காரன் மடம், முடிவைத்தானேந்தல் பகுதிகளில்  பிரசாரத்தில் ஈடுபட்டார் .

அந்த பகுதிகளில் உப்பளத்தொழிலாளர்கள் மத்தியில் பேசிய ஸ்டாலின்,  உப்பள தொழில் சங்கத்தினர் உள்பட தொழிலாளர்களுக்காக ஏற்படுத்தப்பட்ட சட்டங்களை முழுமையாக அ.தி.மு.க. அரசு நிறைவேற்றவில்லை குற்றம்சாட்டினார்.

தி.மு.க. ஆட்சியில் இருந்து இறங்கி 8 ஆண்டுகள் ஆன நிலையிலும் மக்கள் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருவதாகவும், ஆனால்  ஆட்சியை தக்க வைத்து கொள்வதற்காக அதிமுகவினர் பாடுபட்டு வருகின்றனர் என்று கூறியவர்,  மக்கள் நலத்திட்டங்களை அதிமுக அரசு நிறைவேற்றவில்லை என்றார்.

ஏற்கனவே கூட்டணி கட்சிகளுடன் 97 எம்.எல்.ஏ.க்களை பெற்றுள்ள தி.மு.க., 22 தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தல்களில் அமோக வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என்று ஸ்டாலின் நம்பிக்கை தெரிவித்தார்.