சேலம்: சேலத்தில் நடைபெற்ற மாற்றுக்கட்சியினர் இணையும் விழாவில் கலந்துகொண்டு பேசிய அதிமுக இடைக்காலப் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சமி,  திமுக அரசு, அதிமுகவின் திட்டங்களை கிடப்பில் போடுகிறது என குற்றம் சாட்டியதுடன், 2024 நாடாளுமன்ற தேர்தலில் 40 இடங்களிலும் அ.தி.மு.க. கூட்டணி வெற்றி பெறும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

அதிமுகவில் உண்டான ஒற்றை தலைமை மோதல் காரணமாக எடப்பாடி பழனிச்சாமி மற்றும் பன்னீர்செல்வம் என்று இரு தரப்பாக அதிமுக பிளவுபட்டுள்ளது. இதனால் அதிமுகவில் ஓபிஎஸ், இபிஎஸ் என இரு அணிகளாக செயல்பட்டு வருகின்றனர். இந்த சூழலில் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் கட்சி எம்.எல்.ஏக்கள் மற்றும் மாவட்ட செயலாளர்களின் ஆலோசனை கூட்டம் இன்று மாலை நடக்கிறது. இன்று நடைபெறும் ஆலோசனைக் கூட்டத்தில் 5 முக்கிய விஷயங்கள் குறித்து எடப்பாடி பழனிசாமி ஆலோசனை செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னதாக  சேலம்: சேலம் மாவட்டம் ஆத்தூரில் மாற்றுக்கட்சியினர் அ.தி.மு.க.வில் இணையும் விழா நடைபெற்றது. இதில்  தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரும், அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டடு மாற்றுக்கட்சியினரை வரவேற்று சிறப்புரை ஆற்றினார். அப்போது, அ.தி.மு.க. வலுவாக இருப்பதற்கு காரணமே மக்களுடைய பெரும் ஆதரவு தான். அதனால் இன்றைக்கு அ.தி.மு.க.வை எவராலும் வீழ்த்த முடியவில்லை. எத்தனையோ பேர் இந்த கட்சியை உடைக்க பார்த்தார்கள். முடக்கப்பார்த்தார்கள். ஆனால் முடியவில்லை. மு.க.ஸ்டாலின் எத்தனையோ அவதாரம் எடுத்து அ.தி.மு.க.வை அழிக்கப்பார்த்தார். அத்தனை அவதாரத்தையும் தவிடு பொடியாக்கிய கட்சி அ.தி.மு.க. தான். மக்கள்தான் அ.தி.மு.க.வை இயக்குகிறார்கள்.

அ.தி.மு.கவை பொறுத்தவரைக்கும் ஏழை, எளிய, ஒடுக்கப்பட்ட மக்களின் முன்னேற்றத்திற்காக பாடுபடும் கட்சி. இதற்காக எங்களது தொண்டர்கள், நிர்வாகிகள் உழைப்பார்கள்.  தி.மு.க. ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப கிராமம் முதல் நகரம் வரை வசிக்கும் தொழிலாளர்கள், நடுத்தர மக்கள் காத்துக்கொண்டிருக்கிறார்கள்.

2024ம் ஆண்டு நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலில் தமிழகம், புதுச்சேரி உள்பட 40 இடங்களில் அ.தி.மு.க. தலைமையில் அமைக்கப்படுகின்ற கூட்டணி மிகப்பெரிய வெற்றியை பெறும். மக்கள் எழுச்சியோடு இருக்கிறார்கள். எப்போது தேர்தல் வந்தாலும் அதை சந்திக்க தயாராக இருக்கிறார்கள். எப்போது தேர்தல் வந்தாலும் அ.தி.மு.க. வேட்பாளர்களை வெற்றி பெற வைக்க மக்கள் தயாராக இருக்கிறார்கள் என்றார்.

தொடர்ந்து பேசியவர்  நாங்கள் கொண்டு வந்த திட்டத்திற்கு தான் அடிக்கல் நாட்டுகிறார்கள். .மு.க.ஸ்டாலின் நீங்கள் சொன்ன எந்த திட்டமாவது நிறைவேற்றி இருக்கிறீர்களா? அ.தி.மு.க. ஆட்சியில் போடப்பட்ட திட்டத்தை நிறைவேற்றி கொண்டிருக்கிறீர்கள். தாழையூத்து பகுதியில் சோலார் மின்உற்பத்தி நிலையம் அமைப்பதை நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்தியதுடன்,லஞ்சம் வாங்குவதில் முதன்மையாக  தி.மு.க. அரசாக உள்ளது. கமிஷன், கலெக்ஷன், கரப்ஷன் இதுதான் இந்த ஆட்சியில் மக்கள் பார்த்து கொண்டிருக்கிறார்கள். முதன்மை முதன்மை என்று தி.மு.க. சொல்வது லஞ்சம் வாங்குவதை தான் முதன்மை என்று சொல்கிறது. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒரு பொதுக்குழு கூட்டத்தில் நான் காலையில் கண்விழித்து பார்க்கின்றபோது ஏதாவது நடந்து விடுமோ என அச்சத்தில் தேடி பார்க்கிறேன் என்கிறார். அப்படினா அவருடைய நிலைமை பரிதாபமாக உள்ளது. அவர் கட்சிக்காரரை பார்த்து பயப்படுகின்றார்.

கட்சிக்காரர்களை பார்த்து பயப்படுகின்ற நிலைமைக்கு இன்று தி.மு.க. தலைவர் போய்விட்டார்.  ஒழுங்காக கட்சியில் பணி செய்யவில்லை என்றால் யாராக இருந்தாலும் பார்க்க மாட்டேன். கடுமையான நடவடிக்கை எடுப்பேன் என சொன்ன அதே மு.க.ஸ்டாலின் இன்று கட்சியினர் மத்தியில் கெஞ்சுகின்ற நிலைமையை பார்க்கின்றோம். ஆகவே திறமை இல்லாத முதலமைச்சர் நாட்டை ஆளுகின்றார்.

நான் முதலமைச்சராக இருந்தபோது வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனுக்குடன் நிவாரணம் அளித்தேன். கொரோனா தொற்றின்போது சிறப்பாக செயல்பட்டோம். டாக்டர்களுக்கு உரிய முறையில் பயிற்சி அளித்து விலை மதிக்க முடியாத உயிர்களை காப்பாற்றிய அரசாங்கம் அ.தி.மு.க. அரசாங்கம்.

இவ்வாறு அவர் பேசினார்.

பின்னர் சேலம் ஆத்தூரில் செய்தியாளர்களை சந்தித்த  எடப்பாடி பழனிசாமி, திமுக தேர்தல் அறிக்கையில் முதியோர் உதவித்தொகை ரூ.1,000 – ரூ.1,500 என உயர்த்தி வழங்கப்படும் என அறிவித்தார்கள். உயர்த்தி வழங்காவிட்டாலும் பரவாயில்லை. 1000 ரூபாயை முறையாக வழங்குங்கள். ஆட்சிக்கு வரும்போது ஒரு பேச்சு, வந்தவுடன் ஒரு பேச்சு என விமர்சித்தார். கண்ணை இமைக்காப்பது போல் மக்களை காத்த அரசு அதிமுக அரசு. திமுக அரசு, அதிமுகவின் திட்டங்களை கிடப்பில் போடுகிறது என தெரிவித்தார்.