சென்னை:

சசிகலா முதல்வராக வேண்டும் என்று அதிமுக மூத்த நிர்வாகிகள் பேச வேண்டாம் என்று அக்கட்சியின் தலைமை அறிவுறுத்தியுள்ளது.

அ.தி.மு.க. பொதுச்செயலாளராக பொறுப்பேற்றுள்ள சசிகலா முதல்-வராக பொறுப்பேற்க வேண்டும் என்று அமைச்சர்கள் உதயகுமார், செல்லூர் ராஜு, ஓ.எஸ்.மணியன் உள்ளிட்டோர் வலியுறுத்தி வருகிறார்கள்.

ஆட்சியும், கட்சியும் ஒரே தலைமையில் கீழ் இருக்க வேண்டும் என்று அ.தி.மு.க.வை சேர்ந்த மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை தனது அலுவலக லெட்டர் பேடில் எழுதி அறிக்கை வெளியிட்டிருந்தார்.

மேலும், சசிகலா விரைவில் தமிழக முதல்-வராக பதவி ஏற்க வேண்டும் என்றும் நேற்று அதில் குறிப்பிட்டிருந்தார். அலுவலக லெட்டர் பேடில் அறிக்கை வெளியிட்டதற்கு திமுக பொருளாளர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்திருந்தார். அதேபோல் மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடும், லெட்டர் பேடை தம்பிதுரை தவிர்த்திருக்கலாம் என்ற தெரிவித்தார்.

மூத்த நிர்வாகிகளின் இத்தகைய பேச்சால், அதிமுக ஆட்சி ஸ்திரத் தன்மையுடன் இல்லையோ என்ற சந்தேகம் மக்கள் மத்தியில் எழுந்தது. இந்நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா, முதல்வர் பதவியையும் ஏற்க வேண்டும் என பொதுக்கூட்டங்கள் மற்றும் ஊடகங்களில் மூத்த நிர்வாகிகள் பேச வேண்டாம் என்று கட்சியின் தலைமை கட்டுப்பாடு விதித்துள்ளது. இவ்வாறு பேசி குழப்பத்தை விளைவிக்க வேண்டாம் என்று கண்டித்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.