சென்னை: அதிமுக மாவட்ட செயலாளர்களுடன் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடந்த ஆலோசனை கூட்டம் நிறைவு பெற்றது. சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடந்தது. முன்னதாக கூட்டத்துக்கு வந்த அதிமுக நிர்வாகியிடம் ரூ.1 லட்சம் திருடப்பட்டுள்ளது.

அதிமுகவில் எடப்பாடி, ஓபிஎஸ் இடையே மோதல் நீடித்தும் வரும் நிலையில், இன்று இபிஎஸ் தலைமையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது.  இதில் தலைமைக் கழகச் செயலாளர்கள், மாவட்டச் செயலாளர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், செய்தித் தொடர்பாளர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

இந்த கூட்டத்தில்  பொதுச் செயலாளர் வழக்கு குறித்து ஆலோசனை நடத்தப்படுவதாக தகவல் வெளியானது. மேலும், ஜனவரி 4 ஆம் தேதி உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவுள்ள அதிமுக பொது செயலாளர் தொடர்பான வழக்கு, ஜனவரி 9 ஆம் தேதி தொடங்க உள்ள தமிழக சட்டப்பேரவை கூட்டம், எதிர்க்கட்சி துணைத் தலைவர் விவகாரத்தில் சபாநாயகர் முடிவு எடுக்காதது ஆகியவை குறித்து ஆலோசனை நடத்தப்பட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்த நிலையில்,  எடப்பாடி பழனிசாமி தலைமையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம்  முடிவடைந்துள்ளது.

முன்னதாக சென்னை அதிமுக தலைமை அலுவலகத்திற்கு வந்த கட்சி நிர்வாகியிடம் ரூ.1 லட்சம் திருடப்பட்டதாக புகார் எழுந்துள்ளது. கடையநல்லூர் ஒன்றிய செயலாளரிடம் பணம் திருடப்பட்ட நிலையில் ராயப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.