திருமலை: வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஐனவரி 1 முதல் சொர்க்க வாசல் இலவச தரிசனம் டோக்கன் விநியோகம் செய்யப்பட இருப்பதாக திருப்பதி தேவஸ்தானம் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. அதன்படி, 9 இடங்களில் இலவச டோக்கன் விநியோகிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

வைகுண்ட ஏகாதசி என்று உலகம் முழுவதும் உள்ள பெருமாள் கோவில்களில்  சொர்க்க வாசல் திறந்து பக்தர்களுக்கு பக்தர்கள் தரிசனம் செய்வது காலங்காலமாக நடைபெற்று வரம் நிகழ்வாகும். அன்றைய தினம் சொர்க்கவாசல் வழியாக சென்று வந்தால், பாவ புன்னியங்கள் போக்கி, இறந்த பின் சொர்க்கத்துக்கு போவார்கள் என்பது இந்துக்களின் நம்பிக்கை. அதனால், அன்றைய தினம் திருப்பதி ஏழுமலையான் உள்பட பிரபலமான வைணவ தலங்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும்.

இந்த நிலையில், திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சொர்க்க வாசல் தரிசனத்துக்காக இலவச சர்வதர்ஷன் டோக்கன் வழங்கும் பணி ஜனவரி 1ஆம் தேதி முதல் தொடங்கப்படுவதாக திருப்பதி தேவஸ்தானம் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. டிக்கெட் வழங்கப்படும் 9 இடங்கள் குறித்த அறிவிப்பும் வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி,

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஜனவரி 2ஆம் தேதி சொர்க்க வாசல் திறக்கப்பட உள்ளது. ஜனவரி 2 முதல் 11ஆம் தேதி வரை சொர்க்க வாசல் தரிசனம் செய்ய பக்தர்கள் அனுமதிக்கப்படுகிறார்கள். ஜனவரி 2ஆம் தேதி முதல் 11ம் தேதி வரை 10 நாள்கள் வைகுண்ட வாசல் தரிசனம் இருக்கும்.

சொர்க்க வாசல் தரிசனத்துக்காக ஏற்கனவே,  ஆன்லைனில் ரூ.300 சிறப்பு தரிசன டிக்கெட்டுகள் 2 லட்சம் பேருக்கும் ஆன்லைனில் மூலம் வழங்கப்பட்டுள்ளது. இதையடுத்து இலவச தரிசனம் செய்வதற்கான டோக்கன் வழங்கும் இடம் குறித்து அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி,

இலவச தரிசனம் செய்வதற்கான டோக்கன் வழங்கும் இடம்

  • திருப்பதி அலிபிரியில் பூதேவி காம்ப்ளக்ஸ்,
  • ரயில் நிலையம் எதிரே விஷ்ணு நிவாசம்,
  • ரயில் நிலையம் பின்புறம் 2 மற்றும் 3வது சத்திரங்கள்
  • பேருந்து நிலையம் எதிரே சீனிவாசம் வளாகம்,
  • இந்திரா மைதானம்,
  • ஜீவகோனா ஜில்லா பரிஷத் உயர்நிலைப் பள்ளி,
  • பைராகிப்பட்டேடாவில் ராமநாயுடு நகராட்சி உயர்நிலைப்பள்ளி,
  • எம்.ஆர். பள்ளியில் உள்ள ஜில்லா பரிஷத் பள்ளி
  • ராமச்சந்திர புஷ்கரணி

ஆகிய இடங்களில் ஜனவரி 1ஆம் தேதி இலவச சர்வதர்ஷன் டோக்கன் வழங்கும் பணி தொடங்கப்படுகிறது.

ஜனவரி 2ஆம் தேதி வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, ஆழ்வார் திருமஞ்சன நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. அந்த நிகழ்வு நடைபெறும் நாளில் கோயில் முழுவதும் வாசனை திரவியங்களை வைத்து சுத்தம் செய்யப்பட உள்ளது. காலை 6 மணி முதல் 10 மணி வரை கோயிலில் ஆழ்வார் திருமஞ்சன நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளதால், நாளை காலை 11 மணிக்கு பின்னரே பக்தர்கள் சுவாமி தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவார்கள் என தேவஸ்தானம் அறிவித்து உள்ளது.