ஆதிபுருஷ் திரைப்படம் இந்துமத உணர்வுகளை புண்படுத்துவதால் அந்தப் படத்திற்கு தடை கோரி இந்திய சினிமா தொழிலாளர்கள் சங்கம் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளது.

இதுகுறித்து அவர்கள் எழுதியுள்ள கடிதத்தில் ஓடிடி உள்ளிட்ட அனைத்து தளங்களிலும் இந்தப் படம் திரையிடப்படுவதை உடனடியாக உடனடியாக நிறுத்த வேண்டும்.

மேலும், இந்தப் படத்தின் இயக்குனர், தயாரிப்பாளர் மற்றும் வசனகர்த்தா உள்ளிட்டோர் மீது வழக்கு பதிவு செய்யவேண்டும் என்று கூறியுள்ளனர். அவர்கள் அனுப்பியிருக்கும் கடிதத்தில் கூறியுள்ளதாவது :

ஆதிபுருஷ் திரைப்படம் இந்துக்கள் மற்றும் சனாதன தர்மத்தின் மத உணர்வுகளை புண்படுத்துவதாக உள்ளது. இந்த திரைப்படத்தின் திரைக்கதை மற்றும் வசனங்கள் ராமர் மற்றும் ஹனுமான் ஆகியோரை அவதூறு செய்கின்றன. இதனால், அனைத்து இந்திய சினிமா தொழிலாளர்கள் சங்கம் ஆதிபுருஷ் படத்தை திரையிட தடை கோருகிறது,

இந்தியாவில் உள்ள அனைத்து மதத்தினரும் ராமரை கடவுளாக வணங்குகின்றனர். ஆனால் இந்த திரைப்படம் ராமரையும், ராவணனையும் வீடியோ கேம் கதாபாத்திரமாக சித்தரிப்பதுடன் இதில் இடம்பெற்றிருக்கும் உரையாடல்கள் இந்தியா மட்டுமன்றி உலகெங்கிலும் உள்ள இந்துக்களையும் இந்தியரையும் காயப்படுத்துவதாக உள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் தலையிட்டு ஆதிபுருஷ் திரைப்படத்தை திரையிடுவதை உடனடியாக நிறுத்தவும், திரையரங்குகள் மற்றும் OTT தளங்களில் இந்தப் படம் திரையிடுவதை தடை செய்ய உத்தரவிடுமாறு கேட்டுக்கொள்கிறோம்” என்று அதில் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும், இந்து மத உணர்வுகளை புண்படுத்திய இயக்குனர் (ஓம் ரவுத்), எழுத்தாளர் (மனோஜ் முண்டாசிர் சுக்லா) மற்றும் படத்தின் தயாரிப்பாளர்கள் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளனர்.