மும்பை: பெருகிவரும் சகிப்பின்மை, வெறுப்பினால் விளைவிக்கப்படும் குற்றங்கள் மற்றும் சமூகநீதி காவலர்கள் என்ற பெயரில் சட்டத்தை கையில் எடுத்துக்கொள்ளும் போக்குகள் நாட்டின் பொருளாதார வளர்ச்சியை பாதிக்கும் என்று எச்சரித்துள்ளார் தொழிலதிபர் ஆதி கோத்ரெஜ்.

ஒரு விழாவில் பேசிய அவர் கூறியதாவது, “புதிய இந்தியாவை உருவாக்குதல் மற்றும் இந்தியப் பொருளாதாரத்தை 5 டிரில்லியன் ‍அமெரிக்க டாலராக உயர்த்துவது தொடர்பாக ஒரு தெளிவான செயல்திட்டத்தை வழங்கியதற்காக மோடியை வாழ்த்துகிறேன்.

அதேசமயம் நாட்டில் நடக்கும் சம்பவங்கள் அனைத்தும் நல்லவையாக இல்லை. நாட்டில் நிலவும் பெரியளவிலான வறுமை, அதிகரிக்கும் சகிப்பின்மை, உறுதியற்ற சமூக சூழல், பெண்களுக்கு எதிரான குற்றங்கள், கலாச்சார காவலர்களின் செயல்பாடுகள், சாதி மற்றும் மதம் சார்ந்த வன்முறைகள் போன்றவை நாட்டில் அதிகரித்துக்கொண்டு வருகின்றன.

வேலைவாய்ப்பின்மை என்பது 6.1% என்பதாக உள்ளது. இது கடந்த 40 ஆண்டுகளில் மிக அதிகம். எனவே, இந்தப் பிரச்சினைக்கு தீர்வுகாண வேண்டும். மேலும், தண்ணீர் பஞ்சம், சுற்றுச்சூழலை பாதிக்கும் வகையில் அதிகளவிலான பிளாஸ்டிக் பயன்பாடு, பற்றாக்குறையான மருத்துவ வசதிகள் மற்றும் சுகாதாரத்திற்கு குறைந்தளவு நிதியே ஒதுக்கப்படுவது போன்ற சிக்கல்கள் களையப்பட வேண்டியுள்ளது” என்றார்.