ருள்மிகு ஆதிமாரியம்மன் கோயில், திருச்சி மாவட்டம், S.கண்ணனூரில் அமைந்துள்ளது.

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் சப்பாத்திச் செடிகள் சூழ்ந்த வனப்பகுதியாக விளங்கிய இந்த பகுதியில் ஆடு, மாடு மேய்ச்சல் செய்து வந்த ஒருவர் இந்த பகுதியைக் கடக்கும் போது, குழந்தை ஒன்று, “நான் இங்குதான் இருக்கிறேன்” எனக் கூறும் குரல் மட்டும் கேட்டது. அவர் ஊரிலுள்ள மற்றவர்களையும் அழைத்துக்கொண்டு குரல் கேட்ட இடத்திற்கு சென்று பார்த்தனர்.

அப்போது அந்த பகுதியில் புற்று ஒன்று தெரிந்தது. பராசக்திதான் குழந்தை வடிவில் வந்து தான் அங்கு குடி கொண்டிருப்பதை தெரிவித்துள்ளாள் என்பதை அறிந்த மக்கள் அங்கே அம்மனுக்கு திறந்த வெளியில் கோயில் அமைத்து வழிபடத் துவங்கினர். ஆண்டுதோறும் தைப்பூசத் திருவிழாவை கொண்டாடி வந்தனர்.

தைப்பூசத் திருவிழாவின் போது அம்மனை கொள்ளிடம் ஆற்றுக்கு அழைத்து வருவார்கள். ஒரு முறை அம்மனைக் கொள்ளிடத்திற்கு அழைத்து வந்து பின்னர் கோயிலுக்கு அழைத்து செல்லும்போது

இடையில் ஒரு வேப்ப மரத்தடியில் அம்மனை வைத்து விட்டு, சற்று நேரம் இளைப்பாறினர். பின்னர் மீண்டும் அம்மனை கோயிலுக்கு அழைத்து செல்ல அம்மன் இருந்த பல்லக்கைத் தூக்கிய போது அந்த இடத்தை விட்டு அம்மனை எடுக்க முடியவில்லை. ஒரு சிறுமியின் மேல் அருள் வந்து, அம்மன் தான் காவிரிக் கரையில் இருக்க விரும்புவதாக கூறினாள்.

இதனால் பக்தர்கள் அம்மனை வழிபட்டு காவிரி கரையில் அம்மனை விட்டு சென்றனர். பின்னர் விஜயநகர மன்னர்கள் காலத்தில் ஆதிமாரியம்மன் கோயிலில் இருந்து பிடி மண் கொண்டு வரப்பட்டு எஸ்.கண்ணனூரில் கோயில் எழுப்பப்பட்டது. இதையே கண்ணபுரம் மாரியம்மன் என்பர்.

கண்ணனூரில் அம்மன் குடிகொண்டாலும், தன் பிறப்பிடமான சமயபுரத்தின் பெயரால் சமயபுரம் மாரியம்மன் என அழைக்கப்பட்டாள். தற்போது கண்ணனூரில் இருக்கும் சமயபுரம் மாரியம்மனை தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் தவறாமல் அம்மன் பிறப்பிடமான ஆதிமாரியம்மன் கோயிலுக்கும் வந்து தரிசனம் செய்கின்றனர்.

ஆதிமாரியம்மன் நான்கு கரத்தோடு காட்சியளிக்கிறாள். S.கண்ணனூரை நோக்கி, (தென் திசை) மூலஸ்தானம் அமையப்பெற்று இருப்பது இந்த கோயிலின் தனி சிறப்பு.

இன்றைக்கும் தன்னை நாடி வரும் பக்தர்களின் வேண்டுதலை நிறைவேற்றி வரும் ஆதிசக்தி நாககன்னியாகவும் காட்சி தருகிறாள்.

திருச்சி அருகே உள்ள சமயபுரம் மாரியம்மன் பிறந்த இடம் சமயபுரத்தில் இருந்து 3 கி.மீ.தொலைவில் இருக்கிறது. இவ்விடத்தை S.கண்ணனூர் என்று அழைப்பர். இங்கும் மாரியம்மன் குடி கொண்டு இருக்கிறாள். இவளை ஆதி மாரியம்மன் என அழைக்கிறார்கள்.

தனது பக்தர்களுக்கு சமயம் அறிந்து உதவுவதால் சமயபுரம் மாரியம்மன் என அழைக்கப்படுகிறாள்.

இங்கு ஆண்டுதோறும் தைமாதம் பூச்சொரிதல் விழாவும், மாசித் திருவிழாவும், விசயதசமியும் கொண்டாடப்படுகிறது. ஆதிமாரியம்மன் கொள்ளிடம் காவிரிக்கு அழைத்து சென்றதை நினைவூட்டும் வகையில் ஆண்டுதோறும் S.கண்ணனூர் மாரியம்மன் சித்திரை திருவிழாவின் போது சித்திரை முதல் ஞாயிறு அன்று சமயபுரம் ஆதிமாரியம்மன் கோயிலுக்கு அம்மன் அழைத்து வரப்பட்டு தங்கி விட்டு செல்வது வழக்கமாக நடந்து வருகிறது.

திருமணம் நடக்காதவர்கள் நாககன்னி அம்மனை வணங்கி பூசிக்கப்பட்ட மஞ்சள் கயிறைக் கோயில் வேப்ப மரத்தில் கட்டிச் சென்றால் திருமண தடைகள் நீங்கும்.

குழந்தை பேறு இல்லாத பெண்கள் ஆதி மாரியம்மனை வணங்கி நாககன்னியம்மன் முன்புள்ள வேப்ப மரத்தில் மரதொட்டில் கட்டிச் சென்றால் குழந்தை பேறு கிடைக்கும்.

அமாவாசை மற்றும் பவுர்ணமி நாட்களில் அம்மனை வேண்டி வழிபட்டு இரவில் தங்கியிருந்தால் நினைத்தது நடக்கும்.

பிரார்த்தனை நிறைவேறியதும் அம்மனுக்குத் திருமுழுக்காட்டு செய்வித்து நேர்த்திக்கடன் நிறைவேற்றுகின்றனர்.