சென்னை: கூடுதல் மாணவர் சேர்க்கை – கூடுதல் தடுப்பூசி உள்பட பல்வேறு கோரிக்கைகளுடன் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று  மீண்டும் டெல்லி புறப்பட்டார். அங்கு மத்திய சுகாதாரத்துறை அமைச்சரை சந்திக்கிறார்.

தமிழ்நாட்டில் கொரோனா கட்டுக்குள் உள்ளது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை திரும்பி உள்ளது.  இருந்தாலும் தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக்கப்பட்டு உள்ளது.  இதுவரை தமிழ்நாட்டில் நடத்தப்பட்ட மெகா தடுப்பூசி முகாம் மூலம்  1.33 கோடி பேர் பயனடைந்துள்ளனர்.  தற்போது 44 லட்சம் டோஸ் கொரோனா தடுப்பூசிகள் கையிருப்பு உள்ளன.

இந்த நிலையில், மருத்துவ மாணவர்கள் சேர்க்கைக்கான கூடுதல் இடங்கள், கூடுதல் தடுப்பூசி ஒதுக்கீடு உள்ளிட்ட கோரிக்கைகளை வைப்பதற்காக தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் இன்று டெல்லி புறப்பட்டு சென்றார்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் கூறிய அமைச்சர்,  நாடு முழுவதும் 100 கோடி தடுப்பூசி இலக்கை செலுத்தியுள்ள நிலையில் அனைத்து மாநில சுகாதாரத்துறை அமைச்சர்கள் மற்றும் செயலாளர்களுடன் இன்று பிற்பகல் மூன்று முப்பது மணி அளவில் ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது அதிலும் கலந்து கொள்ள உள்ளேன் என்று கூறியவர், மேலும்,  புதிதாக கட்டப்பட்டுள்ள 11 மருத்துவக் கல்லூரிகளில் கூடுதல் இடங்கள் ஒதுக்கீடு இரண்டாம் தவணை தடுப்பூசிகள் கூடுதலாக ஒதுக்கீடு செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை மத்திய சுகாதாரத்துறை அமைச்சரை சந்தித்து வலியுறுத்த உள்ளதாகவும் கூறினார்.

தமிழ்நாட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள 11 மருத்துவக் கல்லூரிகளுக்கு ஏற்கனவே 850 இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது கூடுதலாக 800 இடங்கள் ஒதுக்கீடு செய்து மொத்தமாக 1650 இடங்களாக உயர்த்த வேண்டும் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சரை சந்தித்து வலியுறுத்த இருக்கிறேன், மேலும்,  தமிழகத்தில் கோவக்ஸின் தடுப்பு ஊசி செலுத்தி கொண்டவர்களுக்கு இரண்டாம் தவணை போதிய அளவில் கையிருப்பில் இல்லை அதனை கூடுதலாக ஒதுக்கித் தர வேண்டும் என்ற கோரிக்கையும் வைக்க இருப்பதாக தெரிவித்தார்.