சென்னை: சபரிமலை செல்ல கூடுதல் பேருந்துகள் இயக்க கோரிக்கை வைத்துள்ளதாகவும், அதுகுறித்து நடவடிக்கை எடுக்கப்படும்  அமைச்சர் சேகர் பாபு தெரிவித்து உள்ளார்.

சபரிமலை அய்யப்பன் கோவில் மண்டல மற்றும் மகர விளக்கு பூஜைக்காக திறக்கப்பட்டு உள்ளது. இதையொட்டி நாடு முழுவதும் இருந்து பக்தர்கள் இருமுடி கட்டி சபரிமலையில் குவிந்த வண்ணம் உள்ளனர்.  இந்த ஆண்டு, வரலாறு காணாத அளவுக்கு பக்தர்கள் கூட்டம் அலைமோதி வருகிறது.  தினமும் 1,20,000 பக்தர்கள் கோயிலுக்கு வந்து செல்வதா வும்,  சுமார் 20,000 பேர் ஸ்பாட் புக்கிங் மூலமாகவும், 5,000 பேர் புல்லுமேடு வழியாக மலையேற்றப் பாதை வழியாகவும்  வருவதாகவும் கூறப்படுகிறது.

சன்னிதானத்தில் உள்ள நெரிசலின் அடிப்படையில் பக்தர்கள் மலையேறவும், திரும்பவும் அனுமதிக்கப்படுகின்றனர்.  இந்த முறை பக்தர்களில் குறைந்தது 30% பேர் முதியவர்கள் மற்றும் குழந்தைகள் அதிகம் பேர் சபரிமலைக்கு வருகை தந்துள்ளனர்.  “ஒவ்வொரு மணி நேரத்திற்கும் 4,200 பேர் புனித 18 படிகளைக் கடந்து செல்வது சிறந்த சூழ்நிலையாக இருந்தாலும், உண்மையான விகிதம் ஒரு மணி நேரத்திற்கு 3,800 முதல் 3,900 வரை உள்ளது என கோவில் நிர்வாகம் தெரிவித்து உள்ளது.

கூட்ட நெரிசல் பிரச்சினைக்கு தீர்வு காண, நிலக்கல் உட்பட நியமிக்கப்பட்ட இடங்களில் ஸ்பாட் புக்கிங்கை கட்டுப்படுத்தும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. போக்குவரத்து நெரிசலை குறைக்க நிலக்கல் பகுதியில் அதிக வாகன நிறுத்தும் வசதியும், பம்பை மற்றும் சன்னிதானம் இடையே பக்தர்கள் வசதிக்காக 2,300 கழிப்பறைகளும் அமைக்கப்பட்டுள்ளன.

 “முதல் 19 நாட்களுக்கு கோயிலுக்குச் சென்ற பக்தர்களின் சராசரி எண்ணிக்கை 62,000 ஆக இருந்தால், டிசம்பர் 6 முதல் நான்கு நாட்களில் அது 88,000 ஆக உயர்ந்துள்ளது. இருப்பினும், இந்த ஓட்டம் குறையத் தொடங்கியுள்ளது, விரைவில் இயல்பு நிலைக்குத் திரும்பும் என்று கூறிய தேவசம் போர்டு அதிகாரிகள்,  அய்யப்பனை தரிசிக்க தரப்பில், பல மணிநேரம் வரிசையில் காத்திருப்பவர்களுக்கு தண்ணீர் மற்றும் பிஸ்கட் விநியோகத்தை தீவிரப்படுத்தப்பட்டு உள்ளதாகவும் தெரிவித்தார்.

இந்த நிலையில், இன்று சென்னையில்  செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சேகர் பாபு, சபரிமலை செல்லும் பக்தர்களுக்கு தமிழகத்தில் இருந்து கூடுதல் பேருந்துகள் இயக்க போக்குவரத்துத் துறையிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. கேரள மாநிலம் பம்பையில் இருந்தும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கு கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும்.

தமிழகத்தில் இருந்தும் செல்லும் பக்தர்களின் உதவிக்காக 2 அதிகாரிகள் சபரிமலையில் பணியில் உள்ளனர். சபரிமலை பக்தர்களுக்காக 10 லட்சம் பிஸ்கட் பாக்கெட்டுகள், 10 லட்சம் தண்ணீர் கேன்கள் தமிழகத்தில் இருந்து அனுப்பி வைக்கப்பட உள்ளன என்றார்.

தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்து கழகம் சார்பில் சபரிமலைக்கு கடந்த மாதம் 16ஆம் தேதி முதல் அடுத்தாண்டு ஜன.16 வரை சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. சென்னை, திருச்சி, மதுரை, கடலூரில் இருந்து அதிநவீன சொகுசு மிதவை பேருந்துகள் இயக்கப்படுகிறது. சென்னை, திருச்சி, மதுரை மற்றும்‌ புதுச்சேரி / கடலூர்‌ ஆகிய இடங்களிலிருந்து பம்பைக்கு, அதிநவீன சொகுசு மிதவைப்‌ பேருந்துகள்‌ மற்றும்‌ குளிர்சாதனமில்லா இருக்கை மற்றும்‌ படுக்கை வசதி உள்ள சிறப்புப்‌ பேருந்துகளாக இயக்கப்படவுள்ளன.

சபரிமலை தேவஸ்தானம்‌ அறிவிப்பின்படி 27.12.2023 முதல்‌ 30.12.2023 மாலை 5.00 மணி வரை கோவில்‌ நடை சாத்தப்படுவதால்‌ 26.12.2023 முதல்‌ 29.12.2023 வரை இச்சிறப்புப்‌ பேருந்து இயக்கப்படமாட்டாது என்பத குறிப்பிடத்தக்கத.