சென்னை

இன்று தாம்பரம் – கடற்கரை இடையே 44 மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதால் கூடுதல் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

கடந்த 2 வாரங்களாகச் சென்னையில் பராமரிப்பு பணிகள் காரணமாக ஞாயிற்றுக்கிழமைகளில் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்டன. இன்றும் பராமரிப்பு பணிகள் காரணமாக 44 மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. எனவே பயணிகளின் வசதிக்காகத் தாம்பரம் முதல் சென்னை கடற்கரை வரை உள்ள வழித்தடத்தில் இன்று கூடுதலாக 150 பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்துத்துறை அறிவித்துள்ளது.

போக்குவரத்துக் கழகம் வெளியிடப்பட்டுள்ள பதிவில்,

“இன்று (25.02.2024), தென்னக ரயில்வேயின் பராமரிப்பு பணிகள் காரணமாக, மாநகர போக்குவரத்துக் கழகம் சார்பாக காலை 10.00 மணி முதல் மதியம் 03.15 மணி வரை தாம்பரம் முதல் சென்னை கடற்கரை வரை உள்ள வழித்தடத்தில் வழக்கமாக இயங்கும் பேருந்துகளுடன் கூடுதலாக 150 பேருந்துகள் இயக்கப்படும்” 

என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதாவது பிராட்வேயிலிருந்து அண்ணாசாலை வழியாகத் தாம்பரம் வரை 60 பேருந்துகளும், பிராட்வேயிலிருந்து தி.நகர், எழும்பூர் வழியாகத் தாம்பரம் வரை 20 பேருந்துகளும், கிண்டியில் இருந்து கிளாம்பாக்கம் வரை 10 பேருந்துகளும் கொருக்குப்பேட்டையிலிருந்து தாம்பரம் வரை 30 பேருந்துகளும் பிராட்வேயிலிருந்து கூடுவாஞ்சேரி வரை 20 பேருந்துகளும் தி.நகரிலிருந்து கூடுவாஞ்சேரி வரை 10 பேருந்துகளும் கூடுதலாக இயக்கப்படுகின்றன.