நடிகர் சஞ்சய் தத்துக்கு புற்றுநோய்.. சிகிச்சைக்காக அமெரிக்கா பயணம்..

பிரபல இந்தி நடிகர் சஞ்சய் தத் மூச்சுத்திணறல் காரணமாகக் கடந்த சனிக்கிழமை மும்பையில் உள்ள லீலாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அவருக்கு நடந்த பரிசோதனையில் கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

அவருக்கு மேலும் பல பரிசோதனைகள் நடத்தப்படுவதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இந்நிலையில் நேற்று முன்தினம் சஞ்சய் தத், மருத்துவமனையில் இருந்து ‘டிஸ்சார்ஜ்’ செய்யப்பட்டார்.

வீடு திரும்பிய சஞ்சய் வெளியிட்ட டிவிட்டர் பதிவில்’’ எனக்கு மருத்துவச் சிகிச்சை தேவைப்படுகிறது. எனவே தொழிலுக்குச் சின்ன இடைவெளி கொடுக்கப்போகிறேன்.  உறவினர்கள் என்னுடன் உள்ளனர். யாரும் கவலைப்பட வேண்டாம். மீண்டும் வருவேன்’’ என பதிவிட்டிருந்தார்.

இந்தப்பதிவு பல்வேறு யூகங்களை எழுப்பிய நிலையில், அதற்குப் பதில் கிடைத்துள்ளது.

மருத்துவமனையில் நடந்த சோதனையில் சஞ்சய் தத்துக்கு நுரையீரல் புற்றுநோய் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

இதனை மருத்துவமனை நிர்வாகம் அறிவிக்காத நிலையில், மும்பை சினிமா துறையினர்,’ சஞ்சய் தத்துக்கு புற்றுநோய் இருப்பதை உறுதி செய்துள்ளனர்.

சிகிச்சைக்காக சஞ்சய் தத், அமெரிக்கா செல்ல உள்ளார்.

-பா.பாரதி.