’ஜேம்ஸ்பாண்ட் போன்று ரஜினியை ‘டைட்டிலில்’ அறிமுகம்  செய்ய விரும்பினேன்’’

ரஜினிகாந்த் ரசிகர்களின் நாடி-நரம்புகளைப் புடைக்கச் செய்யும் விதத்தில்-  \‘  S..U..P..E..R.. S..T..A..R ‘ என ஒவ்வொரு எழுத்தும் தனித்தனியாக ‘விசுக்’ ‘விசுக்’ கென ஹாலிவுட் தரப் பின்னணி இசையுடன் டைட்டிலில் காணப்படும் மாயாஜாலத்தை, அண்ணாமலை படத்தில் அறிமுகம் செய்தவர், இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா.

இந்த மாயம் விளைந்தது எப்படி என விவரிக்கிறார், சுரேஷ் கிருஷ்ணா:

‘’அண்ணாமலை படத்தின் ஷுட்டிங் தொடங்குவதற்கு 48 மணி நேரத்துக்கு முன்பாகத்தான் அந்த படத்தை டைரக்ட் செய்ய நான் ஒப்பந்தம் ஆனேன். நான் கே.பாலசந்தர் சாரின் உதவியாளராக இருந்தாலும், அதற்கு  முன்னர் ரஜினி சாரை சந்தித்தது கிடையாது.

ரஜினியின் வசீகரம் என்னைப் பிரமிக்க வைத்தது. நானும் அவர் ரசிகனானேன்.

ஜேம்ஸ்பாண்ட் படங்களில் ஒரு ஹுரோ அறிமுகம் ஆவது போல், பட டைட்டிலில் ரஜினி ’லோகோ’  இருக்க வேண்டும் என விரும்பினேன். ரஜினி சார், தயங்கினார்.

ஆனால் பட தயாரிப்பாளரான கே.பாலசந்தர் சார்,’ உன் விருப்பம் போல் செய்’’ எனப் பச்சைக்கொடி காட்டினார்.அன்று முதல் இன்று வரை ரஜினி சாரின் அனைத்து படங்களிலும் இடம் பெறும் அந்த ’லோகோவை’ உருவாக்க ஒரு மாதம் பிடித்தது.

தேவாவிடம் , ஜேம்ஸ்பாண்ட் படங்களில் வருவது போல், ரஜினி சார் பெயர் வரும்போது பின்னணி இசை இருக்க வேண்டும் எனக் கூறினேன். அவரும் நான் நினைத்த மாதிரியே அமைத்தார்.

அந்த லோகோவுடன் இசையையும் ரஜினி சாருக்கு போட்டு காட்டிய போது ‘’ கலக்கிட்ட’’ என நெகிழ்ந்து போனார்.

இந்த டைட்டிலுக்கு ரசிகர்கள் வரவேற்பு எப்படி உள்ளது என்பதைப் பார்க்க ஆல்பட் தியேட்டருக்கு போனேன். டைட்டில் வரும் போது ரஜினி ரசிகர்கள் எழுப்பிய கரகோஷத்தை டேப்- ரிகார்டரில் பதிவு செய்து, சூப்பர் ஸ்டாரிடம் அதனை போட்டு காண்பித்தேன்’’ என 27  ஆண்டுகளுக்கு முன்பு நிகழ்ந்த ’அண்ணாமலை’ ரகசியங்களை மலைப்போடு சொல்கிறார், சுரேஷ் கிருஷ்ணா.

-பா.பாரதி.