சென்னை

பிக் பாஸ் நிகழ்ச்சியில் வெற்றியாளராக ஆரவ் அறிவிக்கப்பட்டுள்ளார்.

ஸ்டார் விஜய் தொலைக்காட்ட்சி ஜூன் 25ஆம் தேதி பிக் பாஸ் (தமிழ்) நிகழ்ச்சியை துவக்கியது.   இதை கமலஹாசன் தொகுத்து வழங்கி வந்தார்.  உலகெங்கும் இந்த தமிழ் நிகழ்ச்சி தமிழ் ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றது.   ஏற்கனவே பல மொழிகளில் பிரபலாமாகி உள்ள இந்த நிகழ்ச்சி  தமிழில் வந்த போது அதைப் பற்றிய விவாதங்களும், கமெண்டுகளும் இணையத்தில் முதல் இடம் பிடித்தன.

இந்த நிகழ்வில் பரபரப்பாக பேசப்பட்டவைகளில் ஓவியா – ஆரவ் காதலும் ஒன்று.   ஓவியா விஷயத்தில் முன்னுக்குப் பின் முரணாக நடந்துக் கொள்வதாக ஆரவ் மேல் கடுமையான கண்டனங்கள் எழுந்தன.   ஓவியா ஆரவ் போக்கினால் மனநிலை சரியில்லாமல் வெளியேறினார்.    ஒவ்வொருவராக வெளியேற்றப்பட்டு கடைசியில் சினேகன், ஆரவ், கணேஷ், ஹரிஷ் ஆகிய நால்வர் மட்டுமே மிஞ்சினார்கள்.

நேற்று நடந்த இறுதிநாள் நிகழ்வில் யார் வெற்றியாளர்கள் என ரசிகர்கள் ஆர்வமாக காத்திருந்தனர்.   இந்த நிகழ்வில் ஆரம்பம் முதல் கலந்துக் கொண்டு வெளியேறிய அனைவரும் (நமீதாவைத் தவிர) நேற்று நிகழ்ச்சிக்கு வந்திருந்தனர்.   இறுதியாக மிஞ்சிய சினேகன் மற்றும் ஆரவ் இருவரையும் கமலஹாசன் தானே பிக் பாஸ் வீட்டிலிருந்து மேடைக்கு அழைத்து வந்தார்.     அவர் யார் வெற்றி பெற்றவர் என அறிவிக்கும் முன்னரே ரசிகர்கள் “சினேகன், சினேகன்” என குரல் எழுப்பினார்கள்.

கமலஹாசன், “நீங்கள் நினைப்பவர் மட்டுமே தேர்வாக முடியாது.   அனைத்து மக்களும் சேர்ந்து தேர்ந்தெடுப்பவரே வெற்றியாளர்” எனக் கூறி ஆரவ் வெற்றி பெற்றதாக அறிவித்தார்.    பலத்த கரகோஷத்துக்கிடையில் ஆரவ்க்கு வெற்றிச் சின்னமும்,  பரிசான காசோலையும் வழங்கப்பட்டது.