டெல்லி

கைதாகி ஆறு மாதங்களுக்குப் பிறகு ஆம் ஆத்மி நாடாளுமன்ற உறுப்பினர் சஞ்சய் சிங்குக்கு ஜாமீன் கிடைத்துள்ளது.

டெல்லி ஆளும் கட்சியான ஆம் ஆத்மிக்கு மதுபான கொள்கை முறைகேடு வழக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. இவ்வழக்கு தொடர்பாக சி.பி.ஐ மற்றும் அமலாக்கத்துறை தனித்தனியே விசாரணை நடத்தி வருகின்றன. வழக்கில் டெல்லி துணை முதல்வராக இருந்த மனிஷ் சிசோடியா, நாடாளுமன்ற உறுப்பினர் சஞ்சய் சிங், டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் என ஆம் ஆத்மி கட்சியின் முக்கிய தலைவர்கள் தற்போது கைதாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

டெல்லி நாடாளுமன்ற உறுப்பினர் சஞ்சய் சிங், தனக்கு ஜாமீன் கோரி உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார. .இன்று இந்த மனு  விசாரணைக்கு வந்தபோது, சஞ்சய் சிங்கிற்கு ஜாமீன் அளிக்க அமலாக்கத்துறை ஆட்சேபம் எதுவும் தெரிவிக்கவில்லை. எனவே சஞ்சய் சிங்கிற்கு உச்சநீதிமன்றம் ஜாமீன் அளித்ததோடு இந்த உத்தரவை வேறு வழக்குக்கும் முன் உதாரணமாகக் கொள்ளக் கூடாது என்று தெளிவுபடுத்தியுள்ளது.

டெல்லி எம் பி சஞ்சய் சிங் கடந்த ஆண்டு அக்டோபர் 4 -ஆம் தேதி கைது செய்யப்பட்டார்.,டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள சஞ்சய் சிங்கிற்கு 6 மாதங்களுக்குப் பிறகு உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது. மக்களவைத் தேர்தல் நடைபெறும் போது சஞ்சய் சிங் ஜாமீனில் சிறையில் இருந்து வெளியே வர உள்ளது அரசியல் ரீதியாக முக்கியத்துவம் பெற்றுள்ளது.