டெல்லி

நாளை ராகுல் காந்தி வேட்பு மனுத் தாக்கல் செய்ய உள்ளதாகத் தகவல்கள் கூறுகின்றன.

வரும் ஏப்ரல் 26 ஆம் தேதி கேரளாவில் ஒரே கட்டமாக நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறுகிறது. எனவே காங்கிரஸ், கம்யூனிஸ்ட், பாஜக உள்ளிட்ட அனைத்துக் கட்சி வேட்பாளர்களும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.  கடந்த 26 ஆம் தேதி இரண்டாம் கட்ட தேர்தல் நடைபெறும் கேரளா உள்பட மாநிலங்களில் வேட்பு மனு தாக்கல் தொடங்கி வரும் 4-ம் தேதி மனுத் தாக்கல் செய்யக் கடைசி நாள் ஆகும்.

நாளை மதியம் 12 மணிக்கு, வயநாடு தொகுதியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வேட்புமனு தாக்கல் செய்கிறார். அப்போது, அவரது சகோதரி பிரியங்கா காந்தியும் உடனிருப்பார் என தகவல் வெளியாகி உள்ளது. கேரள வயநாடு தொகுதியில் ராகுல் காந்தியை எதிர்த்து இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் ஆனி ராஜா போட்டியிடுகிறார்.

தாங்கள் அனைவரும் மிகவும் உற்சாகமாக இருப்பதாகவும் வயநாட்டில் ராகுல்காந்தி வேட்பு மனுத்தாக்கல் செய்யும் போது ஒரு மெகா ரோடு ஷோ மற்றும் பேரணி நடத்தப்படும் என்று கேரள மாநில காங்கிரஸ் பொறுப்பாளர் விஸ்வநாதன் கூறியுள்ளார். கடந்த முறை 19 இடங்களில் வெற்றி பெற்ற காங்கிரஸ் இந்த நாடாளுமன்றத் தேர்தலில் 20 தொகுதிகளிலும் வெற்றி பெறும் என்றும் கூறியுள்ளார்.ராகுல் காந்தி. கடந்த 2019 தேர்தலில், வயநாடு தொகுதியில் 4.31 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கதாகும்.