திருவனந்தபுரம்: சபரிமலை அய்யப்பன் கோவில் ஆடி மாதப்பிறப்பையொட்டி, பூஜைக்காக நாளை மாலை நடை திறக்கப்படுகிறது. அதைத்தொடர்ந்து நாளை மறுதினம் முதல் 5 நாட்கள் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதி வழங்கப்பபடும் என தேவசம் போர்டு அறிவித்து உள்ளது.

புகழ்பெற்ற சபரிமலை  அய்யப்பன் கோவில் நடை ஒவ்வொரு தமிழ்மாத பிறப்பின்போதும் திறக்கப்பட்ட சில நாட்கள் பூஜை புனஸ்காரங்கள் நடத்தப்படுவது வழக்கம். இதுமட்டுமின்றி,   மண்டல மற்றும் மகர விளக்கு பூஜைக்காக நவம்பர், டிசம்பர், ஜனவரி மாதங்களில் நடை திறக்கப்பட்டு பூஜைகள் நடை பெறும்.  மேலும் விஷு, ஓணம் பண்டிகை, பங்குனி உத்திரம் திருவிழா நாட்களிலும் நடை திறக்கப்படும்.

இந்த நிலையில், ஆடி மாதம் நாளை பிறப்பதை முன்னிட்டு, நாளை மாலை கோவில் நடை திறக்கப்படுகிறது.  மாலை 5.30 மணிக்கு  கோவில் தந்திரி கண்டரரு ராஜீவரு முன்னிலையில், மேல்சாந்தி ஜெயராமன் நம்பூதிரி நடையை திறந்து வைத்து குத்துவிளக்கு ஏற்றி தீபாராதனை நடத்துவார். தொடர்ந்து கற்பூர ஆழியில் தீபம் ஏற்றப்படும். பின்னர் பக்தர்கள் சாமி தரிசனத்திற்கு 18-ம் படி வழியாக சன்னிதானத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள்.

பின்னர், வரும் 17-ந்தேதி முதல் 21-ந்தேதி வரை 5 நாட்கள் கோவிலில் வழக்கமான நிர்மால்ய தரிசனம், கணபதி ஹோமம், நெய் அபிஷேகம், உஷபூஜை, உச்சபூஜை, தீபாராதனை, புஷ்பாபிஷேகம், களபாபிஷேகம், சகஸ் ரகலசாபிஷேகம், படிபூஜை, உதயாஸ்தமன பூஜை ஆகியவை நடைபெறும். 21-ந்தேதி அத்தாழ பூஜைக்கு பிறகு அரிவராசனம் பாடல் இசைக்கப்பட்டு இரவு 10 மணிக்கு கோவில் நடை அடைக்கப்படும் என தேவசம் போர்டு தெரிவித்த உள்ளது.

இதையடுத்து,  நிறை புத்தரிசி பூஜைக்காக சபரிமலை  கோவில் நடை மீண்டும் அடுத்த மாதம் (ஆகஸ்டு) 9-ந்தேதி மாலையில் திறக்கப்படும். 10-ந்தேதி நிறை புத்தரிசி சிறப்பு பூஜை மற்றும் வழிபாடுகள் நடைபெறும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.