ன்று ஆடிப்பெருக்கு. வாழ்வின் வளம் பெருக்கும் ஆடி பெருக்கு

ஆடி மாதத்தில் பல சிறப்பு விழாக்களில் ஒன்று ஆடிபெருக்கு.

ஆடி மாதம் 18-ம் நாளில் எல்லா ஊர் மக்களும் காவிரியாற்றங்கரையில் காவிரியன்னையை வரவேற்க காத்திருப்பர். தென் மேற்கு பருவமழை தொடங்கி புதுப்புனலாய் பொங்கி வரும் காவிரிதாயை தெய்வமாக வணங்கி வழிபடுவர்.

ஆடி 18-ம் நாளில் பெருகி வரும் புது வெள்ளத்தை வணங்கினால் பயிர்கள் செழிக்கும், விவ சாயத்திற்கு தேவையான நீர்வளம் குறைவின்றி கிடைக்கும் என்பது உண்மை. அதனாலேயே விவசாய பெருமக்களுடன் கூடி பலதரப்பு மக்களும் பொன் நிறத்தில் தவழ்ந்து வரும் காவிரியை வணங்குகின்றனர்.

நதியை வழிபடுவது பன்னெடுங்காலமாய் இருந்து வரும் வழக்கம். நமது தமிழகத்தில் குறிப்பாக ஆடி பெருக்கு எனும் பதினெட்டாம் நாள் பெருக்கு அன்று நதிகள் கரைபுரண்டு ஓடும்.

அந்த நாளில் புதுவெள்ளம் ஓடும் காவிரியன்னை தம்மை வணங்கும் பெண்களுக்கு நல்ல கணவனையும், கணவனின் நலத்தை காப்பாள் என்று வணங்குகின்றனர்.

இதற்காகவே ஆடிபெருக்கு அன்று சுமங்கலிகளும், கன்னி பெண்களும் படித்துறை தோறும் புத்தாடை அணிந்து பொங்கி வரும் அன்னை காவிரியை வணங்கி, அவளை அலங்கரிக்கும் பொருட்களை சமர்பிக்கின்றனர்.

ஆடிபெருக்கும் பூஜையில் காதோலை, கருகமணி, காப்பரிசி மிக முக்கியமானது. மேலும் நைவேந்தியமாக சித்திர அன்னங்கள் மற்றும் புதுமஞ்சள் கயிறு, குங்குமம், மஞ்சள் போன்றவையும் பூஜை பொருட்களாக உள்ளன.

காவிரியாற்றின் படித்துறைகளில் பெண்கள் மஞ்சள் பிள்ளையார் பிடித்து வைத்து விளக்கேற்றி, மேற்சொன்ன பொருட்கள், நெய்வேந்தியம் போன்றவை வைத்து கற்பூரம் ஏற்றி பூஜை செய்வர். பூஜையில் வைத்த புதிய தாலிக்கயிற்றை சுமங்கலிகள் கழுத்தில் அணிந்து கொள்வர்.

ஆண்கள் வலதுகரத்தில் கட்டி கொள்வர். கன்னி பெண்கள் காவிரியன்னையை வேண்டி மஞ்சள் கயிறை அணிவது வழக்கம்.

காவிரி தமிழகத்தில் புகும் ஒகேனக்கல் பகுதியில் இருந்து ஆடி பெருக்கு விழா நடைபெறுகிறது. ஆயினும் சிறப்புமிகு பவானி சங்கமம் என்னும் மூன்று நதிகள் கூடும் இடத்தில் லட்சக்கணக்கான மக்கள் ஆடிபெருக்கு அன்று கூடுவர்.

பவானி சங்கமத்தில் சங்கமேஸ்வரர் கோயிலில் காலை அபிஷேக, ஆராதனைகள் நடைபெறும். பின் பெண்கள் மற்றும் குடும்பத்தினர் காவிரியன்னையை பூஜித்து பூக்கள் மற்றும் குங்குமம் போன்றவற்றை ஓடும் வெள்ளத்தில் போட்டு வணங்குவர். சிலர் வாழைமட்டையில் விளக்கேற்றி நதிகளில் விடுவர்.

ஆடிபெருக்கும்… முளைப்பாரி விழாவும்…

ஆடி பெருக்கு என்பதே விவசாயம் தழைக்க வேண்டி நடைபெறும் விழாவாகும். அதனால் ஆடி பெருக்கிற்கு முன்பே நவதானியங்களை மண்ணில் பரப்பி விளையவிட்டு பயிர்கள் வளர்ந்ததை ஒரு சட்டியில் கொண்டு வந்து காவிரியாற்றின் படித்துறைகளில் வைத்து பூஜித்து, கும்மியடித்து பாடி, குலவையிட்டு பின் ஆற்றில் கலக்க விடுவர். இதில் செல்லும் முளை பயிர்கள் ஏதேனும் நிலப்பகுதியில் நன்கு செழித்து வளரும்.

இதன் மூலம் பயிர்கள் வெவ்வேறு நில பகுதிகளிலும் சிறப்பாக வளர்ச்சி பெறும் என்பது உறுதி. அதுபோல், ஆடி பதினெட்டாம் பெருக்குக்கு இணைந்தபடியே மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் முளைகொட்டு திருவிழா என்றவாறு அனைவரும் முளைபாரி கொண்டு வந்து அம்மனிடம் வைத்து வணங்கி பின் அவை ஆற்றில் கலக்கவிடப்படும்.

ஆடி பதினெட்டு பெண்களில் நல்வாழ்வை, விவசாய பெருவாழ்வை வளர்க்கும் திருநாளாய் கொண்டாடப்படுகிறது.