டெல்லி: ஒரே நாடு ஒரே ரேஷன் அட்டை திட்டத்தில் ஆதார் எண்ணை பயன்படுத்தலாம்  என நாடாளுமன்றத்தில் மத்திய உணவு மற்றும் பொது விநியோகத்துறை இணை மந்திரி சாத்வி நிரஞ்சன் ஜோதி தெரிவித்து உள்ளார்.

நாடு முழுவதும் ஒரேநாடு, ஒரே ரேஷன் திட்டம் அமல்படுத்தப்பட்டு உள்ளது. ஒரே நாடு ஒரே ரேஷன் அட்டை திட்டத்தால் புலம் பெயர்ந்தவர்கள் உள்பட அனைத்து பயனாளர்களும் தங்களுக்கான மாதாந்திர உணவு தானியங்களை, நாட்டில் உள்ள எந்த நியாய விலைக் கடைகளிலும் ரேஷன் அட்டையை பயன்படுத்தி வாங்க முடியும். இந்த திட்டம் கொரோனா காலக்கட்டத்தில் இந்த திட்டம் பொதுமக்களுக்கு பேருதவியாக இருந்தது.

இதுதொடர்பாக பாராளுமன்றத்தில் உறுப்பினர் எழுப்பிய கேள்விக்கு மத்தியநுகர்வோர் விவகாரம், உணவு மற்றும் பொது விநியோகத்துறை இணை மந்திரி சாத்வி நிரஞ்சன் ஜோதி, எழுத்துப்பூர்வமாக பதில் அளித்தார். அதில்,  ஒரே நாடு ஒரே ரேஷன் அட்டை திட்டத்தில் சராசரியாக 3.5 கோடி பரிவர்த்தனைகள் நடைபெறுகின்றன.  இந்த திட்டத்தை பெற ரேஷன் கார்டு மட்டுமின்றி, பயோ மெட்ரிக் அங்கீகாரத்துடனான ஆதார் எண்ணை பயன்படுத்தியும் உணவு தானியங்களை பெற முடியும்.

இது குறித்து பண்பலை வானொலி நிலையங்கள், ரயில் நிலையங்களில் ஒலி-ஒளி காட்சிகள், பதாகைகள் உள்ளிட்டவை மூலம் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் 13 மொழிகளில் இடம் பெற்றுள்ள மேரா ரேஷன் என்ற செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதுவரை சுமார் 20 லட்சம் பேர் இதை பதிவிறக்கம் செய்துள்ளனர்.

ஒரே நாடு ஒரே ரேஷன் அட்டை திட்டத்தின் கீழ் தற்போது மாதந்தோறும் சராசரியாக 3.5 கோடி பரிவர்த்தனைகள் நடைபெற்று வருகின்றன. பிரதமரின் ஏழைகளுக்கான உணவு தானிய திட்டம் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் அமல்படுத்தப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டிற்கு 5076284.98 மெட்ரிக் டன் அளவிற்கு உணவு தானியங்கள் ஒதுக்கப் பட்டுள்ளது.அதில் 4087528.24 மெட்ரிக் டன் அளவிலான உணவு தானியங்களை தமிழக அரசு விநியோகித்துள்ளது.

இவ்வாறு அதில் கூறியுள்ளார்.