துபாயில் உள்ள ஏ.ஆர். ரஹ்மானின் பிர்தவுஸ் மியூசிக் ஸ்டூடியோ-வுக்கு இசைஞானி இளையராஜா திடீர் விஜயம் செய்து அவரை ஆச்சரியத்தில் ஆழ்த்தினார்.

இந்த அதிசய நிகழ்வை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்த ஏ.ஆர். ரஹ்மான் அப்படியே “தங்கள் குழுவுக்காக மேஸ்ட்ரோ இளையராஜா இசையமைக்க வேண்டும்” என்று கேட்டுக்கொண்டார்.

ரஹ்மானின் இந்த கோரிக்கையை ஏற்றுக்கொள்வதாக அறிவித்த இளையராஜா “விரைவில் இசையமைத்து தருகிறேன்” என்று ட்விட்டரில் பதிலளித்தார்.

தனது கோரிக்கை ஏற்கப்பட்டதைத் தொடர்ந்து மேலும் ஆச்சரியத்தில் மூழ்கிய ஏ.ஆர். ரஹ்மான் “அமேசிங்” என்று பதிவிட்டிருக்கிறார்.

ஏற்கனவே, எம்.எஸ்.விஸ்வநாதனுடன் இணைந்து இளையராஜா இசையமைத்த மெல்ல திறந்தது கதவு, செந்தமிழ் பாட்டு உள்ளிட்ட படங்களின் பாடல்கள் தலைமுறைகளை கடந்து ஹிட் ஆனது, தற்போது ஏ.ஆர். ரஹ்மானுடன் இணைந்து இளையராஜா இசையமைக்க இருப்பதாக வெளியான தகவல் இசை ரசிகர்களை குதூகலப்படுத்தியுள்ளது.