1
சென்னை எழும்பூர்  பகுதியில் அதிமுக பிரமுகர் விஜய் கிருஷ்ணசாமி என்பவரிடமிருந்து 4.8 கோடி ரூபாய்  பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
சென்னை எத்திராஜ் சாலையில் உள்ள 16 மாடி அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில்  தஞ்சை மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற இணை செயலாளர் விஜய் கிருஷ்ணசாமி என்பவர்  தங்கியிருக்கிறார். இவரது வீட்டில் வாக்காளர்களுக்கு லஞ்சமாக கொடுக்க பல கோடி ரூபாய் பணம் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக தேர்தல் அலுவலர் மற்றும் வருவாய் துறையினருக்கு தகவல் கிடைத்ததுது.
இதையடுத்து  தேர்தல் அலுவலர் சங்கீதா மற்றும் வருமான துறை இணை இயக்குனர் சஞ்சய் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று சோதனை நடத்தினார்கள். அங்கு சுமார் 4 கோடியே 80 லட்ச ரூபாய் சிக்கியது.
பணம் சிக்கிய எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்துதான் தமிழகத்தின் தென் பகுதிகளுக்கு பல ரயில்கள் இயக்கப்படுகின்றன. அதோடு, தமிழகத்தின் பல பகுதிகளுக்கு செல்லும் ஆம்னி பேருந்துகளும் இயக்கப்படுகின்றன. ஆகவே இங்கிருந்து பல்வேறு பகுதிகளுக்கு பணம் கடத்தப்படுகிறதா என்கிற சந்தேகம் எழுந்துள்ளது.
மேலும் ஏற்கெனவே கரூரில் அ.தி.மு.க பிரமுகரிடமிருந்தும் 4.8 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. இப்போது எழும்பூரிலும் இதே தொகை பிடிபட்டுள்ளது. ஆகவே தொகுதிக்கு 4.8 கோடி ரூபாயை அ.தி.மு.க. தலைமை ஒதுக்கி இருக்கிறதா  என்கிற கேள்வியும் அரசியல்வட்டாரத்தில் எழுந்துள்ளது.