தைலாபுரம்: எனது மரணத்துக்காக ஒரு கூட்டம் காத்திருக்கிறது  என பாமக நிறுவனர்  ராமதாஸ் விரக்தியாக கூறினார். தனது மகன் அன்புமணி குடும்பத்தினரை கடுமையாக சாடினார்.

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் பிரசாரத்தில், தனது கட்சி வேட்பாளரான அருளுக்கு ஆதரவாக சேலத்தில் பிரசாரம் மேற்கொண்டபோது,  பிரச்சாரக் கூட்டத்தில்  ராமதாஸ் திடீரென மயங்கி விழுந்தார். இதனார் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து, அவருக்கு சேலத்தில் சிகிச்சை வழங்கப்பட்டு, மேல் சிகிச்சைகாகக   சென்னை அப்பலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு,  சிகிச்சை பெற்றார். தற்போது, உடல்நலம் சீராகி தைலாபுரம் திரும்பினார்.

இதையடுத்து, அவர் தனது தைலாபுரம் இல்லத்தில்  ஏப்ரல் 17ந்தேதி  அன்று முதியோர்களுக்கான வசதியை பெற்று  தபால் வாக்கு செலுத்தினார். பின்னர், தனது மகள் மற்றும் பேரன் குடும்பத்தினருடன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது,

 ‘நல்லதொரு குடும்பம் பல்கலைக்கழகம்’ என்று இருந்த எனது குடும்பத்தை சிதைத்த பெருமை அன்புமணியின் மனைவி சவுமியாவைச் சேரும். என் பேத்திகளையும் மயக்கி, மாற்றி விட்டார். ‘என்னை குல தெய்வம்’ என்று பேசி விட்டு, அவரிடம் இருக்கும் பணத்தை வைத்து, என்னுடன் இருந்த கட்சியின் முன்னோடிகளை பொய் பேசும் கூடாரத்துக்கு அழைத்துச் சென்று விட்டார்.

உடல் நலம் சரியில்லாமல் நான் மருத்துவமனையில் இருந்தபோது, ‘நான், பார்க்க அனுமதிக்கவில்லை’ என்று பொய்யர்கள் சொல்கின்றனர். அவர் பெற்ற பிள்ளைகளும் பொய் சொல்வதில் வல்லவர்கள். பாசத்தை வேரறுத்து குளிர் காய்கின்றனர் என்றார். அப்போது குறுக்கிட்ட அவரது மகள் ஸ்ரீகாந்தி, “மருத்துவமனையில் இருமுறை இருந்தபோது யாருமே வந்து பார்க்கவில்லை, போன் கூட செய்யவிலலை என்று கூறுங்கள்” என்று தந்தையிடம் கேட்டுக்கொண்டார்.

தொடர்ந்து பேசிய ராமதாஸ், “பொய்யர் குடும்பத்தினர் என்னை வந்து பார்க்கவில்லை, போன் கூட செய்யவில்லை என்றவர்,  எனக்கு ஆஞ்சியோ செய்த போது, தமிழகத் தலைவர்கள் அனைவரும் நலம் விசாரித்த போதும் கூட அன்புமணி மற்றும் அவரது குடும்பத்தினர் வந்து பார்க்கவில்லை. ‘எனக்கு வயதாகிவிட்டது, செயல்பட முடியாது’ என்று பொய்யர் கூட்டம் தொடர்ந்து கூறி வருகிறது.

பாமகவை என்னிடம் இருந்து அபகரித்து விட்டனர். எப்போது எனக்கு மரணம் வரும் என ஒரு கூட்டம் காத்திருக்கிறது. மகன், மருமகள், பேத்திகள் கூட அப்படி நினைக்கின்றனர். அன்புமணி நல்ல பிள்ளை இல்லை. குடும்பத்தில் குழப்பத்தை ஏற்படுத்தி கட்சியை அபகரித்து விட்டார். ‘எனக்கு மனநிலை சரியில்லை’ என்று கூறுகிறார் என்று விரக்தியாக தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய  ராமதாஸ் பேரன் முகுந்தன், “பிரச்சினை என்னிடம் இருந்து தொடங்கியதால், நான் பேசுகிறேன். எனக்கு எம்எல்ஏ சீட்டு தருவதாகவும், செலவை ஏற்றுக் கொள்கிறேன் என்றும் வாக்குறுதி அளித்திருந்தனர். இதற்கான ஆதாரம் உள்ளது. இப்போது நான், அரசியல் எதுவும் வேண்டாம், அய்யாவுடன் மட்டும் இருக்கிறேன். அவர்களோ அய்யாவின் முகம், பெயர் வேண்டும். ஆனால் அய்யா வேண்டாம் என்கின்றனர்.

‘குடும்பத்தை பிரித்து விட்டார்’ என்று ஜி.கே.மணி மீது குற்றம் சொல்கின்றனர். அன்புமணி, சவுமியா ஆகியோரின் பணத்தாசை மட்டுமே குடும்பத்தை பிரித்தது. நான் நிறைய விஷயங்களை பேசினால், அவர்களால் வெளியே வர முடியாது.

அன்புமணிக்கும், அவரது இரு மகள்களுக்கும் சவால் விடுக்கிறேன். என்னுடன் உண்மையை பேச தயாரா? எங்கு அழைத்தாலும் நான் வருகிறேன். 2019, 2020, 2021, 2024-ல் என்ன நடந்தது? என் அம்மா காலில் நீங்கள்தான் விழுந்தீர்கள். பாஜக என்னை எதையாவது செய்துவிடும் என என்னுடைய அம்மா காலில் விழுந்தது நீங்கள்தானே..!

அதிமுகவின் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகத்தை போனில் தொடர்பு கொண்டு, மறுநாள் காலை வரச் சொன்னது நான்தானே! அனைத்து நிகழ்விலும் உங்களுடன் நான் இருந்துள்ளேன். அய்யா நினைத்தபடி செயல்பட்டிருந்தால், ஆட்சி அதிகாரத்தில் பாமக இருந்திருக்கும். தன்னுடைய பிள்ளைக்காக சமரசம் செய்த காரணத்தால், பாமக அங்கீகாரத்தை இழந்துள்ளது. அய்யாவை நம்பி வன்னியர்கள் வந்தார்கள். நீங்கள் யாரை வேண்டுமானாலும் நம்புங்கள், அவர்களை நம்பாதீர்கள்” என்றார்.

[youtube-feed feed=1]