டெல்லி:

குடியரசுத் தலைவர், பிரதமர்  போன்ற முக்கியஸ்தர்களின் படங்களை தவறாக பயன்படுத்தினால் ரூ.1 லட்சம் அபராதத்துடன்  6மாதம் சிறை தண்டனை அளிக்கும் வகையில்  புதிய சட்ட திருத்தம்  கொண்டுவர மத்தியஅரசு முடிவு செய்துள்ளது.

நாட்டின் தேசிய கொடி, தேசியச் சின்னமான அசோக சக்கரம், பாராளுமன்ற முத்திரை, உச்சநீதி மன்றம் போன்றவற்றின்  சின்னம், புகைப்படங்களை தவறாக பயன்படுத்தினால், ஏற்கனவே உள்ள சட்டத்தின்படி  அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. இதில் திருத்தம் செய்ய மத்தியஅரசு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

சமீப காலமாக பிரதமர், குடியரசுத் தலைவர் போன்றோரின் படங்கள் சமூக வலைதளங்களில் தவறாக சித்தரிக்கப்பட்டு வருகிறது.  இதை தடுக்கும் வகையில்,  சின்னங்கள் மற்றும் பெயர்கள் முறையற்ற பயன்பாட்டை தடுக்கும் சட்டம்(1950) ல் திருத்தம் கொண்டு வர மத்திய நுகர்வோர் விவகார அமைச்சகம்  முடிவு செய்துள்ளது.

அதன்படி ஜனாதிபதி, பிரதமர் புகைப்படங்கள் மற்றும் தேசிய கொடி, மகாத்மா காந்தி, அசோக சக்கரம், பாராளுமன்றம் தர்மா சக்கரம், உச்சநீதி மன்றம், உயர்நீதி மன்றம் ஆகியவற்றின் சின்னம் மற்றும் பெயர்கள் வர்த்தகம் மற்றும் விளம்பரங்களுக்கு தவறாகவும், அனுமதியின்றி பயன்படுத்தினால் ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்படும்.

அதே தவறை மீண்டும் செய்தால் ரூ.5 லட்சம் அபராதம் மற்றும் 6 மாதம் வரை ஜெயில் தண்டனை விதிக்கப்படும் வகையில் புதிய சட்டத்திருத்தம் கொண்டு வரப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்த புதிய சட்டத்திருத்தம் வரும் பாராளுமன்ற குளிர்கால கூட்டத்திதொடரில் நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.