
பிகில் படத்தின் கதை தன்னுடையது என்றும் பிகில் படத்தை வெளியீட தடை விதிக்க வேண்டுமெனவும் இயக்குனர் செல்வா என்பவர் வழக்கு தொடர்ந்தார்.
அட்லி இயக்கத்தில், ஏ.ஆர்.ரகுமான் இசையமைப்பில், விஜய் நயன்தாரா நடித்துள்ள திரைப்படம் பிகில்.
இந்தப் படம் தீபாவளிக்கு திரைக்கு வர உள்ளது. இதனிடையே, இயக்குனர் கே.பி.செல்வா என்பவர், தன்னுடைய கதையை திருடி பிகில் திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளதாகவும், படத்திற்கு தடை கோரியும் சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். ஆனால் இந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. இந்நிலையில், அவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது .
அப்போது அட்லீ மற்றும் படத்தயாரிப்பு நிறுவனம் உரிமையியல் நீதிமன்றத்தில் சமர்பித்த ஆவணங்களை உயர்நீதிமன்றத்தில் சமர்பிக்க வேண்டும் என்று கூறி வழக்கை இன்று ஒத்திவைத்தனர்.
இந்நிலையில் இன்று நீதிபதி சுரேஷ்குமார் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அட்லீ தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் 2018 ஆம் ஆண்டு ஜூலை 18 ஆம் பிகில் பட கதையை பதிவு செய்ய இருப்பதாகவும் , மனுதாரர் அக்டோபரில் தான் பதிவு செய்தார் என்றும் சொல்லப்பட்டாது.
மேலும் விளம்பரத்திற்காகவும் , பணத்திற்காகவும் இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது என்றும் அட்லீ தரப்பில் வாதிடப்பட்டது. இதற்கு இயக்குனர் செல்வா தரப்பில் பணத்திற்க்கோ அல்லது விளம்பரத்திற்க்கோ வழக்கு தொடரவில்லை என்று வாதிட்டனர்.
இரண்டு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி சுரேஷ்குமார் வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார். இதனால் அடுத்தவாரம் திங்கள் அல்லது செவ்வாய்கிழமை தீர்ப்பு வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.