சென்னை:
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து, அதிமுக சார்பில் இன்று தமிழகம் முழுவதும் 32 மாவட்டங்களில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், பல இடங்களில் மதிய நேரத்தின்போது, உண்ணாவிரத பந்தலில் இருந்து எழுந்து சென்ற அதிமுகவினர் பலர் உணவு அருந்தியதும், டாஸ்மாக் சென்று வந்ததும் தெரிய வந்ததுள்ளது.
கோவை காந்திபுரத்தில் உண்ணவிரதம் இருந்த அதிமுகவினர், அங்கிருந்து நைசாக எழுந்து சென்று, அருகிலுள்ள டாஸ்மாக் கடைக்கு சென்று மது வாங்கி குடித்தனர்.
இதை பார்த்த செய்தியாளர் ஒருவர் படம் எடுத்துள்ளார். அதைக்கண்ட அதிமுகவினர் படம்பிடித்த செய்தியாளர் மீது கொலைவெறி தாக்குதல் நடத்தினர். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஏற்கனவே பல இடங்களில், மோர், சமோசா நொறுக்குத் தீனி மற்றும் குத்தாட்டத்துடன் அதிமுகவின் உண்ணாவிரத போராட்டம் எழுச்சியுடன் நடைபெற்றது. அதிமுக தொண்டர்களும் குஷியாக உண்ண விரத போராட்டத்தில் கலந்துகொண்டு கொண்டாடி வருகின்றனர்.
எம்.ஜி.ஆர், ஜெயலலிதா இணைந்து நடித்த படத்தின் பாடல்கள் ஒலிபரப்பப்பட்டு ஆடல் பாடலுடன் உண்ணாவிரத போராட்டம் களைகட்டியது.
இன்றைய அதிமுக போராட்டம் பெரும்பாலான இடங்களில், காலை 10 மணிக்கு மேல்தான் தொடங்கி உள்ள நிலையில், அதிலும் பெரும்பாலோனோர் மதிய உணவு இடைவேளைக்கு சென்று வந்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டு வருகிறது.