சென்னை:

திரிபுராவில் லெனின் சிலை உடைக்கப்படுவதுபோல, தமிழகத்தில் பெரியார் சிலை உடைக்கப்படும் என பேசிய பாஜக தேசிய செயலாளர் ராஜாவுக்கு தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் விடுத்துள்ள கண்டன அறிக்கையில்,  தமிழகத்தில் உள்ள பெரியார் சிலைகள் அகற்றப்படும் என்கிற விதத்தில் ராஜா  பேசியிருப்பது கண்டனத்திற்குரிய, தரக்குறைவான பேச்சாகும். தடித்த, தரமற்ற வார்த்தைகளால் அரசியல் கட்சிகளை, அரசியல் தலைவர்களை அடிக்கடி விமர்சனம் செய்வது என்பது திரு. எச். ராஜா அவர்களின் வாடிக்கையான செயலாகி விட்டது.

பெரியார் பற்றி ராஜா பேசியதை தமிழ்நாட்டில் யாரும் ஏற்கவோ, ரசிக்கவோ மாட்டார்கள். ராஜா தன்னை மாற்றிக் கொள்வதும், திருத்திக் கொள்வதும், இதுபோன்ற தரமற்ற பேச்சுக்களை நிறுத்திக் கொள்வதும் அவருக்கும், அவருடைய கட்சிக்கும் நல்லது.

திரு. ராஜாவின் பேச்சிற்கு தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் எனது கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.