சென்னை:

தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 18 பேர் தகுதி நீக்கம் பற்றிய வழக்கில் முதல்வர் தரப்பு வாதம் முடிவடைந்த நிலையில் அனைவரும் எழுத்துப்பூர்வமான வாதங்களை தாக்கல் செய்ய சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவிட்டு உள்ளது.

ஜெ.மறைவை தொடர்ந்து இரண்டாக பிரிந்த அதிமுக, பின்னர் ஓபிஎஸ்-ன் நிபந்தனைகளை ஏற்று ஒன்றானது. அதையடுத்து, சசிகலா தரப்பினர் கட்சி நடவடிக்கைகளில் இருந்து விலக்கி வைக்கப்பட்டனர்.

இதன் காரணமாக சசிகலாவால் துணைப்பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்ட டிடிவி தினகரன் தனி அணியாக செயல்பட்டு வருகிறார். அவருக்கு ஆதரவாக அதிமுகவை சேர்ந்த 18 எம்எல்ஏக்கள் கவர்னரிடம் கடிதம் கொடுத்த னர். இதையடுத்து, அவர்களை கட்சி கொறடா உத்தரவின்பேரில் தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் அதிரடி உத்தரவு வழங்கினார்.

இதனை எதிர்த்து 18 பேரும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு கடந்த செப்டம்பர் மாதம் முதல்  விசாரணை நடந்து வருகிறது. இந்த வழக்குடன் நம்பிக்கை வாக்கெடுப்பு செல்லாது என அறிவிக்க கோரிய வழக்கு, 21 தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் சட்டசபைக்குள் குட்கா கொண்டு வந்த வழக்கு உள்ளிட்ட 7 வழக்குகள் விசாரிக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கு நேற்று சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி தலைமையிலான முதலாவது அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.

அப்போது, தமிழக அரசு தரப்பில் ஆஜரான மூத்த வக்கீல் வைத்தியநாதன் வாதிடுகையில், ‘‘இந்த வழக்கில் மேலும் வாதகங்கள் மேற்கொள்ள கால அவகாசம் வேண்டும்’’ என்றார்.

அதையடுத்து,  தலைமை நீதிபதி , ‘‘ஏற்கனவே அனைத்து விஷயங்களும் வாதிடப்பட்டுள்ளது. எனினும் வாதங்கள் அனைத்தையும் நாளைக்குள் (10ம் தேதி) முடித்துக் கொள்ள வேண்டும் என்றார்.

அதைத்தொடர்ந்து இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. அதையடுத்து முதல் தரப்பு வாதம் நடந்தது முடிந்தது.

அதைத்தொடர்ந்து நீதிபதிகள், இந்த  வழக்கு குறித்து,  சபாநாயகர், சட்டப் பேரவை செயலாளர்கள், அரசு கொறடா, தமிழக முதல்வர், மற்றும் தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்எல்ஏக்கள் ஆகியோர் தங்கள்  தரப்பு எழுத்துப்பூர்வ மான வாதங்களை ஜன.22ம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என்று ஆணையிட்டனர்.