சென்னை,

மீனவர்கள் அடுத்த 4 நாட்கள் கடலுக்குள் போக வேண்டாம் என்று சென்னை வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

சமீபத்தில் ஓகி புயல் காரணமாக தமிழக்தில் குமரி மாவட்டம் கடுமையான பாதிப்புகளை சந்தித்து உள்ளது. அப்போது கடலுக்கு சென்ற ஏராளமான மீனவர்கள் இன்னும் கரை திரும்பாத நிலையில், மீனவர்கள் மீண்டும் கடலுக்கு செல்ல வேண்டாம் என தமிழக வானிலை மையம் எச்சரித்து உள்ளது.

வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப்பகுதி அதே இடத்தில் நீடிப்பதாகவும், ஏற்கனவே கடலுக்கு சென்ற மீனவர்கள்,  ஆழ்கடல் மீனவர்கள் உடனே  கரைக்கு திரும்ப வேண்டும் எனவும், இன்னும் 4 நாட்கள் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் எனவும் தமிழக  வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய சென்னை  வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன், அடுத்த 12 மணிநேரத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதி தாழ்வு மண்டலமாக மாற வாய்ப்புள்ளது எனவும் தாழ்வு மண்டலம் வடக்கு தமிழகத்தை நோக்கி நகர கூடும் எனவும் தெரிவித்தார்.

அடுத்த 2 தினங்களுக்கு தமிழகம், புதுவையில் ஒருசில இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது எனவும் அடுத்த 4 நாட்களுக்கு மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் எனவும் குறிப்பிட்டார்.  அடுத்த 2 நாட்களை பொறுத்தவரை ஒரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.