தன்னைவிட்டு நடிகை கவுதமி பிரிந்தது குறித்து நடிகர் கமல்ஹாஸன் மனம் திறந்து பேசியுள்ளார்.

கமல்ஹாஸனும், நடிகை கவுதமியும் கடந்த 13 ஆண்டுகளாக (திருமணம் செய்துகொள்ளாமல்) லிவிங் டு கெதர் முறையில், வாழ்ந்து வந்தனர். இந்தநிலையில் கமலை பிரிவதாக தனது ட்விட்டர் பக்கத்தில் கவுதமி நேற்று அறிவித்தார். இது குறித்து கமல் ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்திருப்பதாவது:
“கவுதமிக்கு எது நிம்மதியை அளித்தாலும் எனக்கு உடன்பாடுதான். தற்போது என்னுடைய உணர்ச்சிகள் முக்கியம் இல்லை. கவுதமி மற்றும் (அவரது மகள்) சுப்பு இருவரும் சவுகரியமாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்க வேண்டியது தான் முக்கியம். அவர்களுக்கு என் வாழ்த்துக்கள்.
அவர்களுக்கு எப்பொழுது எது தேவைப்பட்டாலும் நான் இருக்கிறேன் என்பதை அவர்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்று விரும்புகிறேன்
எனக்கு ஸ்ருதி, அக்ஷரா மற்றும் சுப்புலட்சுமி என 3 மகள்கள்! இந்த உலகிலேயே நான் தான் மிகவும் அதிர்ஷ்டக்கார தந்தை என்று நினைக்கிறேன்” என்று கமல் கூறியுள்ளார்.
“கவுதமிக்கு புற்றுநோய் ஏற்பட்டபோது கமல் அவருக்கு உறுதுணையாக இருந்தார். அதே போல அண்மையில் கமல் கீழே விழுந்து காலில் அடிப்பட்டபோது கவுதமி அவரை மிக அன்புடன் கவனித்துக்கொண்டார். இவர்களுக்கிடையே பிரிவு என்பதை நம்பவே முடியவில்லை” என்கிறது திரையுலக வட்டாரம்.
Patrikai.com official YouTube Channel