ஓசூர்:
ஓசூரில் தமிழ்நாடு விசுவ இந்து பரிஷத் அமைப்பின் மாவட்ட செயலாளர் சூரி நேற்று இரவு கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம், பழிக்குப்பழியாக நடந்தது என்ற தகவல் வெளியாகி உள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரை சேர்ந்தவர் சூரி (எ) சுரேஷ். வயது 40. . தமிழ்நாடு விசுவ இந்து பரிஷத் அமைப்பின் கிருஷ்ணகிரி மாவட்ட செயலாளராக செயல்பட்டு வந்தார்.

ரியல் எஸ்டேட் மற்றும் கேபிள் டி.வி. தொழில் செய்து வந்த இவரது அலுவலகம் ஓசூர் நேரு நகரில் உளளது. நேற்று இரவு அலுவலகத்தில் இருந்து இரவு சுமார் எட்டு மணியளவில் வீடு செல்ல, அலுவலகத்தில் இருந்து வெளியே வந்தார்.
அப்போது முகமூடி அணிந்த நான்கு பேர், பயங்கர ஆயுதங்களால் சூரியை தாக்க முற்பட்டது. அவர்களிடமிருந்து தப்பி செல்ல சூரி ஓடினார். அவரை விரட்டிச் சென்ற ஆயுத கும்பல், சரமாரியாக அரிவாளால் வெட்டியது. இதில் தலையின் பின்பகுதி உள்பட பல இடங்களில் சூரிக்கு வெட்டுக்கள் விழுந்தன. ரத்த வெள்ளத்தில் சாய்ந்த சூரி, சம்பவ இடத்திலேயே மரணமடைந்தார். தாக்குதலில் ஈடுபட்ட கும்பல், அங்கிருந்து மோட்டார் சைக்கிள்களில் தப்பியது.
இந்தத் தகவல் பரவியதும் ஓசூரில் பதட்டமான சூழல் ஏற்பட்டது. கடைகள் அடைக்கப்பட்டன. டிஎஸ்பி ஆறுமுகம், ஓசூர் டவுன் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மற்றும் காவலர்கள், சம்பவ இடத்துக்கு சென்றனர். சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஓசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.

கடந்த 2007ம் ஆண்டு ஓசூரில் தளி சாலையில் கிருஷ்ணகிரி மாவட்ட தே.மு.தி.க. துணை செயலாளர் அம்மன் பாலாஜி, அவரது அலுவலகத்தில் வைத்து கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்டார். ரியல் எஸ்டேட் தொழில் பிரச்சனையில் நடந்த அந்த கொலை வழக்கில், சூரி உள்ளிட்ட சிலரை குற்றவாளிகள் பட்டியலில் காவல்துறையினர் சேர்த்திருந்தனர். அந்த வழக்கில் சூரி விடுதலை ஆனார்.
இதன் பிறகு ரியல் எஸ்டேட் தொழில் மற்றும் கேபிள் டி.வி உள்ளிட்ட தொழில்களை சூரி செய்து வந்தார். சில ஆண்டுகளுக்கு முன்பு தமிழ்நாடு விசுவ இந்து பரிஷத்தில் சேர்ந்த அவருக்கு மாவட்ட செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டது.
இந்த நிலையில், பாலாஜியின் கொலைக்கு பழிக்குப்பழியாக சூரி கொல்லப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.
·
·
·
Patrikai.com official YouTube Channel