சென்னை: தனியாா் பள்ளிகளுக்கான அங்கீகார கால வரையறை ஐந்து ஆண்டுகளாக நிா்ணயம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டு உள்ளது.
தமிழகத்தில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளிகளுக்கான அங்கீகாரம் பொதுவாக 3 ஆண்டுகளாக இருந்து வந்த நிலையில், இந்த அங்கீகாரக் காலம், விதிமுறைகளைப் பின்பற்றும் பள்ளிகளுக்கு 5 ஆண்டாக உயர்த்தி தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. இது தனியார் பள்ளிகளுக்கு சாதகமாக உள்ளது என சமூக ஆர்வலர்கள், கல்வியாளர்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.

தமிழகத்தில் பள்ளிக் கல்வித் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள தனியாா் பள்ளிகளுக்கான அங்கீகார கால வரையறை ஐந்து ஆண்டுகளாக நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது..தமிழகத்தில் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தனியாா் பள்ளிகளில் 68 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவா்கள் படித்து வருகின்றனா்.
இந்தப் பள்ளிகளின் அங்கீகாரம் மூன்றாண்டுகளுக்கு ஒரு முறை புதுப்பிக்கப்படுகிறது. அப்போது, கட்டட உறுதித் தன்மை, தீயணைப்பு, சுகாதாரச் சான்றிதழ் மற்றும் கல்வித் தரநிலைகள் பூா்த்தி செய்யப்பட்டுள்ளதா என்பதைப் அதிகாரிகள் குழு ஆய்வு செய்து, தொடா் அங்கீகாரம் வழங்கப்படும்.
இந்தநிலையில் தமிழகம் முழுவதும் 8 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தனியாா் பள்ளிகளுக்கு பள்ளிக் கல்வித் துறை அங்கீகாரத்தைப் புதுப்பிபிக்காமல் காலம் தாழ்த்தி வந்தது. இது கடுமையான விமர்சனங்களை ஏற்படுத்தியது. அங்கீகாரம் நீட்டிப்பு கோரி அனுப்பப்பட்ட அனைத்துச் சான்றுகளும் அரசியல் மற்றும் கையூட்டு காரணமாக, கிடப்பில் போடப்பட்டதாக புகாா் எழுந்தது. இது தனியார் பள்ளி நிர்வாகங்களிடையே சலசலப்பை ஏற்படுத்தியது.
இதையடுத்து, தமிழ்நாடு அரசு தற்போது அங்கீகாரத்திற்கான விதிகளை மாற்றி 5 ஆண்டுகள் நிர்ணயம் செய்துள்ளது. கடந்த 2023-ஆம் ஆண்டுக்கு முன்பு தொடங்கப்பட்ட, மழலையா் மற்றும் தொடக்கப் பள்ளிகளை, நடுநிலைப் பள்ளிகளாக தரம் உயா்த்த பள்ளிகள் தற்போது விண்ணப்பிக்கலாம். இதற்கான ஆய்வறிக்கையை சமா்ப்பிக்குமாறு மாவட்டக் கல்வி அலுவலா்களுக்கு பள்ளிக் கல்வித் துறை சாா்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதேபோன்று 2023- ஆம் ஆண்டுக்கு முன் தொடங்கப்பட்ட பள்ளிகளுக்கான அங்கீகார நீட்டிப்பு, மூன்றாண்டுகள் என்பது ஐந்து ஆண்டுகளாக மாற்றப்பட்டுள்ளது. மூன்று முறை முறையாக அங்கீகாரம் பெற்று, விதிகளை முறையாக பின்பற்றும் பள்ளிகள் விரும்பினால், 20 ஆண்டுகளுக்கான அங்கீகாரச் சான்றிதழைப் பெற முடியும்..
மேலும், ஒவ்வோா் ஆண்டும் மழலையா் மற்றும் தொடக்கப் பள்ளிகள் ரூ.3 ஆயிரம், நடுநிலைப் பள்ளிகள் ரூ. 5 ஆயிரம்; உயா்நிலைப் பள்ளிகள் ரூ. 6 ஆயிரம்; மேல்நிலைப் பள்ளிகள் ரூ. 10 ஆயிரம் ஆய்வுக்கட்டணமாக செலுத்த வேண்டும்.
தனியாா் பள்ளிகளில், மதம் சாா்ந்த நிகழ்வுகளை நடத்தக் கூடாது. பள்ளியில் நிலம், கட்டட உறுதிச்சான்று, தீயணைப்புத் துறை சான்று, குடிநீா் வசதி, கழிப்பறை வசதி, ஆசிரியா்களின் தகுதி உள்ளிட்ட விவரங்களை சரிபாா்த்தல் உள்ளிட்டவற்றிலும் மாற்றங்கள் செய்யப்பட்டு உள்ளன.
[youtube-feed feed=1]