சென்னை: ஓட்டல் ஊழியர்களுக்கு குடல் காய்ச்சல் (டைபாய்டு காய்ச்சல்) தடுப்பூசி கட்டாயம் போடப்பட வேண்டும் என தமிழ்நாடு உணவு பாதுகாப்புத்துறை உத்தரவிட்டுள்ளது.

ஓட்டல்களில் உணவு சமைக்கும் மற்றும் பரிமாறும் ஊழியர்கள் குடல் காய்ச்சலுக்கு எதிரான தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என்று தமிழ்நாடு உணவு பாதுகாப்புத் துறை அறிவுறுத்தி உள்ளது.

குடல் காய்ச்சல் என்பது சால்மோனெல்லா டைஃபி மற்றும் சால்மோனெல்லா பாராடிபி போன்ற பாக்டீரியாக்களால் ஏற்படும் ஒரு கடுமையான தொற்று ஆகும். இது டைபாய்டு காய்ச்சல் என்றும் அழைக்கப்படுகிறது. இந்த நோய்த்தொற்றின் பொதுவான அறிகுறிகள் உயர் காய்ச்சல், வயிற்று வலி மற்றும் குளிர்ச்சி. இது பொதுவாக சுகாதாரமற்ற உணவு மற்றும் தண்ணீரால் பரவுகிறது

ஓட்டல் வாடிக்கையாளர்களுக்கு காய்ச்சல் பரவுவதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து உணவு பாதுகாப்புத் துறை உத்தரவிட்டுள்ளது. மேலும் பல்வேறு வழிகாட்டுதல் நெறிமுறைகளையும் வழங்கி உள்ளது. அதன் விவரம் வருமாறு:

 தமிழ்நாட்டில் உணவகங்கள் வைத்து நடத்தக்கூடிய உரிமையாளர்கள் முறையாக உணவு பாதுகாப்பு துறை உரிமம் வைத்திருக்க வேண்டும். அதை முறையாக புதுப்பிக்க வேண்டும்.

உணவகங்களில் உணவு சமைக்கும் போது எந்த ஒரு உணவுப் பொருட்களிலும் செயற்கை நிறமூட்டிகளை சேர்க்கக் கூடாது.

உணவு பாதுகாப்புத் துறையின் விதியின் படி உணவுப் பொருட்களை சமைக்க வேண்டும். உணவகங்களில் உணவு சமைக்கக் கூடிய பணியாளர்கள் நோய் தொற்று பாதிப்பு மற்றும் காய்ச்சல் பாதிப்பு இல்லாமல் இருக்க வேண்டும்.

ஓட்டலில் பணியாற்றக் கூடிய பணியாளர்கள் அனைவரும் உணவு சமைக்கும் போதும், உணவு பரிமாறும் போதும், கையுறை மற்றும் தலையுறை அணிந்து கொண்டு உணவுகளை தயாரிக்கவும், பரிமாறவும் வேண்டும்.

அதேபோல ஓட்டல்களில் சமையல் அரங்கு, உணவு சேமிப்பு கிடங்கு, கை கழுவும் இடம், கழிவறை உள்ளிட்ட இடங்களை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும்.

கடந்த சில நாட்களாக உணவகங்களில் பணியாற்றக் கூடிய பணியாளர்கள் மூலம் காய்ச்சல் பாதிப்பு மற்றும் நோய் தொற்று பரவல் ஏற்படுவதாக புகார் எழுந்து உள்ள நிலையில் ஓட்டலில் பணியாற்றக் கூடிய பணியாளர்களுக்கு (Enteric Fever) தடுப்பூசியை செலுத்திக் கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது.

ஓட்டலில் உணவு பரிமாறுபவர்கள், உணவு தயாரிப்பவர்கள் உள்ளிட்ட அனைவரும் இந்த தடுப்பூசியை செலுத்திக் கொள்ள வேண்டும்.

ஓட்டல் உரிமையாளர்கள் தங்களுடைய கடையில் பணியாற்றக் கூடிய பணியாளர்கள் ஒவ்வொருவருக்கும் ரூபாய் 500 செலுத்தி தடுப்பூசியை போட்டுக் கொள்ள வேண்டும்.

மேலும் தடுப்பூசியை செலுத்திக் கொண்ட பிறகு மருத்துவ சான்றிதழ் பெற்றுக் கொள்ள வேண்டும்.

தடுப்பூசி போட்ட சான்றிதழை மாவட்ட உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர்கள் மற்றும் அதிகாரிகள் அனைத்து ஓட்டல்களுக்கு சென்று ஆய்வு மேற்கொள்ள வேண்டும்.

2 ஆண்டுக்கு ஒரு முறை தடுப்பூசியையை செலுத்திக் கொள்ள வேண்டும்/

இவ்வாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.