திருச்சி: கரூர் கூட்ட நெரிசலில் 41 பேர் பலியான சம்பவம் தொடர்பாக, சிபிஐ விசாரணைக்கு, தவெக நிர்வாகிகள் இன்று 2வது நாளாக ஆஜராகி உள்ளனர். அவர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

தவெக தலைவர் விஜய்- மக்கள் சந்திப்பு என்ற பெயரில் தொகுதி வாரியாக பயணம் செய்து மக்களை சந்தித்து வருகிறார். அதன்படி, 2025 ஆம் ஆண்டு செப்டம்பர் 27 அன்று கரூர் நகரத்தில் தமிழ்த் திரைப்பட நடிகரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் மேற்கொண்ட அரசியல் பரப்புரையின் போது, ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி குறைந்தபட்சமாக 41 பேர் உயிரிழந்துள்ளனர், 100-க்கும் அதிகமானோர் காயமடைந்தனர். இந்த விவகாரத்தில் பல்வேறு தகவல்கள், வீடியோக்கள், புகைப்படங்கள் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளன.
இதையடுத்து இந்த விவகாரம் தொடர்பான வழக்கை விசாரிக்க சிபிஐக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து, ஐ.பி.எஸ். அதிகாரி பிரவீன்குமார் தலைமையிலான சி.பி.ஐ. அதிகாரிகள் குழுவினர், திருச்சி அருகே தாந்தோணிமலையில் உள்ள அரசு சுற்றுலா மாளிகையில் தங்கியிருந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஏற்கனவே இந்த வழக்கை விசாரித்து வந்த சிறப்பு புலனாய்வு குழுவினரிடம் இருந்து 1,316 பக்கங்கள் கொண்ட ஆவணங்களை பெற்றுக்கொண்டு ஆய்வு செய்த அவர்கள், முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்து கரூர் கோர்ட்டில் கடந்த அக்டோபர் 22-ந்தேதி தாக்கல் செய்தனர்.
முதல் தகவல் அறிக்கையில், கரூர் மேற்கு மாவட்ட த.வெ.க. செயலாளர் மதியழகன், மாநில பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், இணைச்செயலாளர் நிர்மல்குமார் மற்றும் த.வெ.க.வை சேர்ந்த சிலர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்தது.
இதைத்தொடர்ந்து, அவர்களை விசாரணைக்கு ஆஜராகுமாறு சிபிஐ சம்மன் அனுப்பியது. அதன்படி, தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், நிர்மல்குமார், தேர்தல் பிரசார மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனா, கரூர் மேற்கு மாவட்ட செயலாளர் மதியழகன், கட்சி நிர்வாகி பவுன்ராஜ் உள்ளிட்டோருக்கு சி.பி.ஐ. சார்பில் சம்மன் அனுப்பப்பட்டது. மேலும் விஜய்யின் பிரசார வாகனத்தில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா காட்சி பதிவுகள், த.வெ.க. சார்பில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்ட வீடியோ காட்சிகளை ஒப்படைக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டது
இதனையடுத்து கடந்த 8-ந்தேதி த.வெ.க. வக்கீல் அரசு, சென்னை பனையூர் அலுவலக நிர்வாகி குருசரண் உள்பட 3 பேர் சி.பி.ஐ. முன்பு ஆஜராகி கண்காணிப்பு கேமரா பதிவுகள் உள்ளிட்ட ஆவணங்களை ஒப்படைத்தனர்.
இதைத்தொடர்த்நத நவம்பர் 24ந்தேதி (நேற்று காலை) தாந்தோணிமலையில் உள்ள அரசு சுற்றுலா மாளிகைக்கு புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜூனா, நிர்மல்குமார், மதியழகன், பவுன்ராஜ் ஆகிய 5 பேரும் விசாரணைக்கு ஆஜராகினர். அப்போது அவர்களிடம், பிரசார கூட்டம் எத்தனை மணிக்கு தொடங்கும் என அறிவித்து இருந்தீர்கள், எத்தனை மணிக்கு விஜய் பிரசாரத்தை தொடங்கினார், கூட்டத்தில் எவ்வளவு பேர் கலந்து கொண்டனர், எவ்வளவு பேர் வருவார்கள் என்று எதிர்பார்த்து இருந்தீர்கள் என்பன உள்பட பல்வேறு கேள்விகளை எழுப்பி விசாரணை மேற்கொண்டதாக தெரியவருகிறது. அப்போது, அவர்கள் தெரிவித்த தகவல்களை சி.பி.ஐ. அதிகாரிகள் பதிவு செய்து கொண்டனர்.
இந்த விசாரணையானது இரவு 8.20 மணி வரை சுமார் 10½ மணி நேரம் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து இன்றும் விசாரணைக்கு வர அறிவுறுத்தபட்டனர். அதன்படி, இன்று 2வது நாளாக, கரூர் சி.பி.ஐ. அலுவலகத்தில் த.வெ.க. பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், இணை பொதுச்செயலாளர் நிர்மல் குமார், தேர்தல் பிரசார மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனா ஆகியோர் விசாரணைக்கு ஆஜராகினர். அவர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.
முன்னதாக, சிபிஐ இது தொடர்பாக 300-க்கும் மேற்பட்டவர்களுக்கு சம்மன் அனுப்பியும், சிலரை போன் மூலம் அழைத்தும், நேரில் சென்றும் அக். 30-ம் தேதி முதல் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அக். 31-ம் தேதி தொடங்கி வேலுசாமிபுரத்தில் கடை வைத்திருப்பவர்கள், நிறுவனம் நடத்தி வருபவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது.
அக். 31-ம் தேதி மற்றும் நவ 1-ம் தேதி ஆகிய இரு நாட்கள் 3டி லேசர் ஸ்கேனர் மூலம் வேலுசாமிபுரத்தில் சாலையை சிபிஐயினர் அளவீடு செய்தனர். நவ. 4, 5-ம் தேதிகளில் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்ட போலீஸார், நவ. 6-ம் தேதி முதல் நவ. 11-ம் தேதி வரை ஆம்புலன்ஸ் உரிமையாளர்கள், ஓட்டுநர்களிடம் 6 நாட்கள் விசாரணை நடத்தினர்.
நவ. 8 மற்றும் 9 ஆகிய இரு நாட்கள் தவெக வழக்கறிஞர் அரசு உள்ளிட்டோர் பிரச்சார வாகனத்தின் சிசிடிவி காமரா பதிவுகள் அடங்கிய வீடியோக்கள், நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் விபரங்கள் அடங்கிய ஆவணங்களை, சிபிஐயை கேட்ட அனைத்து ஆவணங்களை ஒப்படைத்து 2 நாட்களாக விளக்கம் அளித்தனர்.
நவ. 10 மற்றும் 17-ம் தேதிகளில் தமிழ்நாடு பவர் கிரிட் கார்ப்பரேஷன் அதிகாரிகள், நவ. 11-ம் தேதி முதல் கூட்ட நெரிசலில் காயமடைந்தவர்களிடம் நவ. 14-ம் தேதி வரை 4 நாட்கள் விசாரணை நடத்தப்பட்டது.
நவ. 15-ம் தேதி கரூர் வேலுசாமிபுரத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்தினர், காயமடைந்தவர்களை நேரில் சந்தித்தும் கரூர் வெங்கமேடு விவிஜி நகரை சேர்ந்த கூட்ட நெரிசலில் காயமடைந்த தாய், மகளான உஷா மற்றும் திவ்யா ஆகியோரை நேற்று முன்தினம் நேரில் சந்தித்தும் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
நவ. 16-ம் தேதி நாமக்கல் ஏஎஸ்பி ஆகாஷ் ஜோஷியிடம் நவ. 17-ம் தேதி மாநில நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் 5 பேரிடம் சிபிஐ விசாரணை நடத்தியது.
இந்நிலையில் கரூர் சுற்றுலா மாளிகையில் நவ. 13-ம் தேதி தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக அதிகாரிகள் ஆஜரான நிலையில் மீண்டும் 2-வது முறையாக 6 நாட்களுக்கு பிறகு தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழக கரூர் நகர செயற்பொறியாளர் கணிகை மார்த் தாள் உள்ளிட்ட 10 மின் வாரிய அதிகாரிகள் சிபிஐ விசாரணைக்கு நவ. 19-ம் தேதி ஆஜராகினர்.
கடந்த 4 நாட்களாக விசாரணைக்கு யாரும் ஆஜராகாத நிலையில் இன்று (நவ. 24-ம் தேதி) காலை சுமார் 10 மணியளவில் கரூர் சுற்றுலா மாளிகைக்கு தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், தேர்தல் பிரிவு பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா, இணை செயலாளர் சிடி நிர்மல்குமார், கரூர் மேற்கு மாவட்ட செயலாளர் வி.பி.மதியழகன், பவுன்ராஜ், வழக்கறிஞர் அரசு ஆகியோர் 3 கார்களில் ஆஜராகினர்.
கூட்டத்திற்கு செய்யப்பட்ட ஏற்பாடு, பிரச்சார வாகன வருகையின் போது ஏற்பட்ட நெரிசல், உயிரிழப்பு சம்பவம் உள்ளிட்ட விபரங்கள் குறித்து விசாரணை நடத்தப்பட்டது. தொடர்ந்து ஒன்றரை மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை நடைபெற்று வருகிறது. தவெக நிர்வாகிகள் வருகை காரணமாக தவெக நிர்வாகிகள், மகளிரணியினர் கரூர் சுற்றுலா மாளிகைக்கு வெளியே காத்திருந்தனர்.