சென்னை: லைகா நிறுவனம் மீதான நடிகர் விஷால் வழக்கில் தனி நீதிபதி உத்தரவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளனர். ரூ.10 கோடி டெபாசிட் செய்யவும் உத்தரவிட்டு உள்ளது.
லைகா நிறுவனத்திற்கு விஷால் ரூ.21.29 கோடியை 30 % வட்டியுடன் தர வேண்டுமென தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்தும், ரூ.10 கோடியை டெபாசிட் செய்யவும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

முன்னதாக, நடிகர் விஷால், தனது விஷால் பிலிம் ஃபேக்டரி நிறுவனத்திற்காக சினிமா பைனான்சியர் அன்புச்செழியனின் கோபுரம் பிலிம்ஸ் நிறுவனத்திடம் பெற்ற 21 கோடியே 29 லட்சம் ரூபாய் கடனை, லைகா நிறுவனம் செலுத்தியது. அந்த தொகை முழுவதும் திருப்பி செலுத்தும் வரை, விஷால் பட நிறுவனத்தின் அனைத்து படங்களின் உரிமைகளும் லைகா நிறுவனத்துக்கு வழங்க வேண்டுமென ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டிருந்தது. இந்த ஒப்பந்தத்தை மீறி, படங்களை வெளியிட்டதால் விஷால் பணத்தை திருப்பித் தர உத்தரவிடக் கோரி லைகா நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.
வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், லைகா நிறுவனத்துக்கு வழங்க வேண்டிய 21 கோடியே 29 லட்சம் ரூபாயை 30 சதவீத வட்டியுடன் வழங்க விஷால் தரப்புக்கு உத்தரவிட்டது.
இந்த உத்தரவை எதிர்த்து, விஷால் தரப்பில் மேல் முறையீட்டு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கின் விசாரணை நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், முகமது ஷஃபீக் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, ஒரு குறிப்பிட்ட தொகையை நீதிமன்றத்தில் டெபாசிட் செய்யலாமே? என விஷால் தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
இதற்கு விஷால் தரப்பு வழக்கறிஞர், 15 கோடி ரூபாய் கடன் பெற்ற நிலையில், ஆண்டிற்கு 30 சதவீத வட்டியுடன் திரும்ப செலுத்த பிறப்பித்த உத்தரவு சட்டவிரோதம் எனக் கூறினார். வட்டி தொகை மட்டும் 40 கோடி ரூபாய்க்கு மேல் வருவதாகவும் குறிப்பிட்டார். லைகா கூறுவது போல் நான் பெரிய பணக்காரன் இல்லை”
அப்போது, குறுக்கிட்ட நீதிபதிகள், அப்படியானால் திவாலானவர் என அறிவிக்க தயாராக இருக்கிறீர்களா? என சென்னை உயர்நீதிமன்றம் விஷால் தரப்புக்கு கேள்வி எழுப்பியது. மேலும், 30 சதவீத வட்டி என்பது மிக அதிகம் எனவும் இப்படி சுரண்டப்படுவதை அனுமதிக்க முடியாது எனவும் நீதிபதிகள் கூறினர்.
இதனையடுத்து, லைகா நிறுவனத்திடம் பெற்ற கடனை வட்டியுடன் செலுத்த வேண்டுமென்ற தனி நீதிபதியின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்த நீதிபதிகள், இந்த விவகாரத்தில் முதற்கட்டமாக 10 கோடி ரூபாயை டெபாசிட் செய்ய விஷால் தரப்புக்கு உத்தரவிட்டனர்.
மேலும், மனுவுக்கு லைகா நிறுவனம் பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை நான்கு வாரங்களுக்கு தள்ளி வைத்தனர்.