சென்னை: தென்மாவட்டங்களில் வெளுத்து வாங்கும் கனமழை காரணமாக 15 மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. அதுபோல புதுச்சேரியிலும் இன்று பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

வடகிழக்கு பருவமழையின் ஒரு பகுதியாக, வங்கக் கடலில் புதிதாக உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை நாளை மறுநாள் புயலாக மாறக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.
இந் நிலையில் நெல்லை, தூத்துக்குடி உள்பட 15 மாவட்டங்களுக்கு அதிக கனமழை எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக நெல்லை மாவட்டத்துக்கு இன்று ஆரஞ்ச் அலெர்ட்டும் விடப்பட்டுள்ளது.= இதையடுத்து மாணவர்களின் நலன் கருதி, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாவட்ட நிர்வாகங்கள் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அறிவித்து வருகின்றன.
அதன்படி, நெல்லை மற்றும் தென்காசியில் இன்று பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி, கள்ளக்குறிச்சி, கரூர் மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
கனமழை எச்சரிக்கையால் திருவாரூர், கடலூர், விருதுநகர் மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, தஞ்சாவூர், திருச்சி, மயிலாடுதுறை, சிவகங்கை, நாகப்பட்டினம், மதுரை மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களிலும் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விடுமுறை நாளை ஈடு செய்யும் வகையில் வேறொரு நாளில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு வேலைநாள் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் உள்ள அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை
தூத்துக்குடி, கள்ளக்குறிச்சி, ராமநாதபுரம், திருவாரூர் , தஞ்சாவூர், திருச்சி, மயிலாடுதுறை, புதுக்கோட்டை, விருதுநகர், சிவகங்கை, நாகப்பட்டினம், கரூர், அரியலூர், மதுரை, கடலூர் ஆகிய 15 மாவட்டங்களிலும் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுபோக சேலம் மாவட்டத்தில் ஆத்தூர், தலைவாசல், கெங்கவல்லி மற்றும் பெத்தநாயக்கன்பாளையம் ஆகிய நான்கு வட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
நெல்லை, தென்காசி
ஆகிய தமிழகத்தின் இரண்டு மாவட்டங்களில் மட்டுமே இன்று பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.