டெல்லி: கோயம்புத்தூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்கான சாத்தியக்கூறுகளை  மத்தியஅரசு ஆராய்ந்துள்ளதா என  திமுக வில்சன் எம்.பி கேள்வி எழுப்பினார். இதற்கு பதில் அளித்த மத்தியஅரசு,  அதற்காக  சாத்தியம் இல்லை என கூறியுள்ளது.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் கேள்வி நேரத்தின்போது,  திமுக எம்பி. வில்சன், கோயம்புத்தூரில் புதிய எய்ம்ஸ் அமைப்பதற்கான சாத்தியக்கூறுகளை ஒன்றிய அரசு ஆராய்ந்துள்ளதா என  கேள்வி எழுப்பினார்.

மேலும்,  ஆக்ஸ்பாம் இந்தியா 2022இன் படி, 70 சதவீத கிராமப்புற சமூக சுகாதார மையங்கள் (CHC) முழு அளவிலான சிறப்பு மருத்துவர்களை கொண்டிருக்கவில்லை, 83 சதவீதம் அறுவை சிகிச்சை நிபுணர்கள் இல்லாமல் செயல்படுகின்றன, 75 சதவீதம் மகப்பேறு மருத்துவர்கள் இல்லாமலும் 82 சதவீதம் மருத்துவர்கள் இல்லாமலும் செயல்படுகின்றன.

நகர்ப்புற சமூக சுகாதார மையங்களும் சிறப்பு மருத்துவர்கள் கிடைப்பதில் 45 சதவீதம் பற்றாக்குறையை எதிர்கொள்கின்றன என்கின்றது. இந்தப் பிரச்சினையைத் தீர்க்க இன்னும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை” என சுட்டிக்காட்டியுள்ளார். அதேபோல் ஆயுஷ்மான் பாரத் பிரதான் மந்திரி ஜன் ஆரோக்ய யோஜனாவின் கீழ் வெளிநோயாளர் பராமரிப்பு, நோய் கண்டறிதல் மற்றும் மருந்துகளுக்கான தொகையை காப்பீட்டில் சேர்க்க வேண்டும் எனவும் அவர் கோரினார்.

இதற்கு பதில் அளித்த மத்திய சுகாதாரத்துறை  இணை அமைச்சர் பிரதாப்ராவ் ஜாதவ் ,  பிரதமரின் ஸ்வஸ்த்ய சுரக்ஷா திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டில் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை உள்பட நாடு முழுவதும் 22 எய்ம்ஸ் மருத்துவமனைகள் அமைக்க ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே மத்திய சுகாதார அமைச்சகத்தின் கீழ் மாநிலங்கள் வாரியாக எய்ம்ஸ் மருத்துவமனைகள் அமைக்கப்பட்டு வரும் நிலையில்,  தமிழ்நாட்டின் மதுரையிலும் எய்ம்ஸ் அமையப்பட உள்ளது. அதற்கான கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. மற்ற மாநிலங்களில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டப்பட்டு பயன்பாட்டுக்கு வந்துள்ள நிலையில், தமிழ்நாட்டில்  மட்டும் அரசியல் பிரச்சினைகளால் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுவது தாமதமாகி வருகிறது.