டெல்லி: தமிழ்நாடு ஆளுநர்மீதான தமிழ்நாடு அரசு தொடர்ந்துள்ள வழக்கின்  விசாரணை பிப்ரவரி 4ந்தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்ட நிலையில், அன்றைய தினம் நீதிமன்றம் உத்தரவு வழங்கும் என தெரிவித்து உள்ளது.

தமிழ்நாடு அரசுக்கும் ஆளுநர் ஆர்.என்.ரவிக்கும் இடையே மோதல் போக்கு நீடித்து வருகிறது. ஏற்கனவே அரசின் மசோதாக்களுக்கு ஆளுநர் அனுமதி கொடுப்பது தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில், துணைவேந்தர் விவகாரம் தொடர்பாக  யுஜிசி பிறப்பித்த உத்தரவுக்கு எதிராகவும் தமிழ்நாடு அரசு  உச்சநீதிமன்றத்தில் கூடுதல் மனுதாக்கல் செய்யப்பட்டது.

அந்த மனுவில், “சட்டவிதி இல்லாத நிலையில் தன்னிச்சையாக குழு அமைத்து அதை அரசாணையாக வெளியிட ஆளுநர் கூறுகிறார். துணைவேந்தர்கள் நியமனத்தில் அரசியல் சாசன நடைமுறை மீது தாக்கத்தை ஏற்படுத்துகிறார். ஆளுநரின் அதிகாரம் தொடர்பான விவகாரத்தில் துணைவேந்தர் நியமனம் தொடர்பான ஆளுநரின் செயல்பாட்டையும் கருத்தில் கொள்ள வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

 இது தொடர்பான வழக்கு ஜனவரி 22ந்தேதி விசாரணை நடைபெற்றது. அப்போது வாதங்களை கேட்டறிந்த நீதிபதிகள், “இந்த வழக்கின் விசாரணை வரும் பிப்ரவரி 4ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது. அன்றைய தினம் முதல் வழக்காக விசாரிக்கப்படும். மேலும் அன்றைய தினமே (04.02.2025) இந்த வழக்கில் உத்தரவு பிறப்பிக்கப்படும்” எனத் தெரிவித்தனர்.

முன்னதாக பல்கலைக்கழங்களில் துணைவேந்தா்களை நியமிக்கும்போது பல்கலைக்கழக மானியக்குழு தலைவா் அல்லது அவரால் முன்மொழியப்பட்ட பிரதிநிதியைக் கொண்ட தேடுதல் குழு அமைக்க வேண்டும் என்று ஆளுநா் ரவி தமிழக அரசுக்கு அறிவுறுத்தியிருந்தாா். இந்நிலையில், துணை வேந்தா்கள் நியமனத்தில் ஆளுநரின் குறுக்கீடு இருப்பதாகக் கூறி தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் தொடா்ந்த வழக்கு நிலுவையில் உள்ளது. குறிப்பாக, பாரதியாா் பல்கலைக்கழகம், தமிழ்நாடு ஆசிரியா் கல்வி பல்கலைக்கழகம், சென்னை பல்கலைக்கழகம் ஆகியவற்றின் துணைவேந்தா்களை அடையாளம் காண 2023, செப்.6-இல் ஒரு குழு அமைத்து ஆளுநா் உத்தரவிட்டாா். இது தொடா்பான தனது அறிவிக்கையை 2024, ஜன. 9-ஆம் தேதி ஆளுநா் திரும்பப் பெற்றுக் கொண்டாா். அத்துடன் யுஜிபி விதிகளின்படி அதன் தலைவா் அல்லது அவரால் முன்மொழியப்பட்டவரைக் கொண்ட தேடுதல் குழுவை அமைக்குமாறும் தமிழக அரசை ஆளுநா் கேட்டுக் கொண்டாா்.

இதற்கு தமிழக அரசு ஒத்துக்கொள்ள மறுத்தது.  இதற்கிடையே, அண்ணா பல்கலைக்கழகம், அண்ணாமலைப் பல்கலைக்கழகம் ஆகியவற்றின் துணைவேந்தா் களின் பதவிக் காலம் கடந்த ஆண்டு ஆக. 10-ஆம் தேதி நிறைவடைந்தது. பாரதிதாசன், பெரியாா் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தா்களின் பதவிக் காலம் முறையே வரும் பிப். 4, மே 19 ஆகிய தேதிகளில் நிறைவடையவுள்ளது.

இந்நிலையில், பல்கலைக்கழக வேந்தா் என்ற தனது தகுதியின் அடிப்படையில் அண்ணாமலைப் பல்கலைக்கழகம், அண்ணா பல்கலைக்கழகம், பாரதிதாசன் பல்கலைக்கழகம், பெரியாா் பல்கலைக்கழகம் ஆகியவற்றின் துணைவேந்தா்கள் பதவிக்குரிய தகுதி வாய்ந்தவா்களை அடையாளம் காண கடந்த ஆண்டு நவம்பா் மற்றும் டிசம்பரில் ஆளுநா் தேடுதல் குழுக்களை அமைத்து உத்தரவிட்டாா். இதையும் தமிழ்நாடு அரசு ஏற்றுக்கொள்ள மறுத்தது.

இதைத் தொடா்ந்து, தமிழக அரசால் பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு அனுமதி தராமல் இழுத்தடிப்பது உள்ளிட்ட நிா்வாக விஷயங்களிலும் துணைவேந்தா்களின் நியமன நடவடிக்கையிலும் ஆளுநா் குறுக்கீடு செய்வதாகக் கூடுதல் மனுவை தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது. அந்த மனு கடந்த வெள்ளிக்கிழமை விசாரணைக்கு அனுமதிக்கப்பட்டது. அன்றைய நாள் விசாரணையில், இந்த விவகாரம் தொடா்பாக உச்சநீதிமன்ற நீதிபதிகள் பா்திவாலா, மகாதேவன் ஆகியோா் அடங்கிய அமா்வு முன்னிலையில் ஆஜரான மூத்த வழக்குரைஞா்கள் அபிஷேக் சிங்வி, பி. வில்சன், ஆளுநரின் குறுக்கீடு தொடா்பான கூடுதல் விவரங்களுடன் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவை ஆளுநா் விவகாரத்தை விசாரிக்கும் போது சோ்த்து விசாரிக்குமாறு வலியுறுத்தினா்.

அப்போது நீதிமன்றத்தில் இருந்த மத்திய அரசின் தலைமை சட்ட ஆலோசகா் வெங்கடரமணி, இந்த விவகாரம் தொடா்பான விசாரணையை ஒரு வாரத்துக்கு ஒத்தி வைக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டாா். இதையடுத்து நீதிபதிகள், ‘இந்த விவகாரத்தை ஜன. 22-இல் விசாரிக்கிறோம். அதற்குள்ளாக சம்பந்தப்பட்டவா்கள் இதற்குத் தீா்வு கண்டு விட்டால் நல்லது. இல்லையென்றால் நாங்கள் தீா்க்க வேண்டியிருக்கும்’ என்று குறிப்பிட்டு விசாரணையை ஒத்திவைத்தனா்.

இந்த நிலையில், இவ்வழக்கு நேற்று  விசாரணைக்கு வந்த  நிலையில், உச்ச நீதிமன்றம்  பிப்ரவரி 4ந்தேதிக்கு ஒத்தி வைத்துள்ளது. அன்றைய தினம் முக்கிய உத்தரவை பிறப்பிக்கும் என்று கூறப்படுகிறது.