சென்னை

விசிக பூரண மதுவிலக்கு அமல்படுத்தக் கோரி சென்னையில் 24 ஆம் தேதி அன்று ஆர்ப்பாட்டம் நடத்தும் என திருமாவளவன் அறிவித்துள்ளார்.

இத்வரை கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் பகுதியில் விஷச் சாராயம் அருந்தியதில் 49 பேர் உயிரிழந்து 100க்கும் மேற்பட்டவர்கள் மருத்துவமனைகளில் தொடர்ந்து தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.  இச்சம்பவத்திற்கு எதிர்க் கட்சியினர் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

விஷச்சாராயம் விற்பனை செய்த கன்னுக்குட்டி என்பவரும் அவரது மனைவியும் கைதாகியுள்ளனர்.  உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு 10 லட்சம் ரூபாய் நிவாரணமும்,  சிகிச்சையில் இருப்பவர்களுக்கு 50 ஆயிரம் உதவித் தொகை வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

நேற்று மாலை உயிரிழந்தவர்களின் உடல்கள் தகனம் செய்யப்பட்டன. கள்ளக்குறிச்சிக்கு விசிக தலைவரும் எம்பியுமான திருமாவளவன் சென்று விஷச்சாராயத்தால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர்களை வீடு வீடாக சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.

இது தொடர்பாக திருமாவளவன் எம்பி தனது எக்ஸ் பக்கத்தில்

“தொடரும் நச்சு சாராயச் சாவுகள்: கள்ளக்குறிச்சியில் நாற்பதுக்கும் மேற்பட்டோர் பலி! தொடர்புடைய அதிகார வர்க்கத்தினர் உள்ளிட்ட அனைவரையும் கைது செய்ய வேண்டுமெனவும்; தமிழ்நாட்டில் முழு மதுவிலக்கை நடைமுறைப்படுத்திட வேண்டுமெனவும் வலியுறுத்தி சென்னையில் 24-06-2024 அன்று மாலை 3.00 மணியளவில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெறும். ”

என்று பதிவிட்டுள்ளார்.