சென்னை: சென்னையில் 40 காவல் ஆய்வாளர்கள் பணியிட மாற்றம் செய்து சென்னை மாநகர காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவிட்டுள்ளார்.

மக்களவைத் தேர்தலையொட்டி, ஒரே இடத்தில் பணியாற்றி வந்த காவல்துறையினர், அரசு அதிகாரிகள் பல தரப்பினரும் இடமாற்றம் செய்யப்பட்டனர். தற்போது,  வாக்குப்பதிவு மற்றும் வாக்கு எண்ணிக்கை பணிகள் நடைபெற்று முடிவுற்று, தேர்தல் நடத்தை விதிகளும் திரும்ப பெறப்பட்டன.

இதையடுத்து, ஏற்கெனவே பணியிட மாறுதல் செய்யப்பட்டவர்கள் தாங்கள் விருப்பப்பட்ட இடங்களுக்கு பணிக்குச் செல்ல மனுக்கள் கொடுக்கலாம் என டிஜிபி சங்கர் ஜிவால் மற்றும் சென்னை காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் ஆகியோர் அறிவிப்பு வெளியிட்டனர். இதையடுத்து சென்னை, ஆவடி, தாம்பரம் ஆகிய காவல் ஆணையர் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளைச் சேர்ந்த போலீஸார் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் மனுக்களை அளித்தனர். அதன்படி கடந்த 3 நாட்களாக மனுக்கள் பெறப்பட்டுவந்தது. சுமார் 1000க்கும் மேற்பட்டோர் மனு கொடுத்துள்ளதாக தகவல்கள் வெளியானது.

இந்த நிலையில், முதல் கட்டமாக சென்னை, தாம்பரம், ஆவடி ஆகிய காவல் மாவட்டங்களில் 40 காவல் ஆய்வாளர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இவர்களுக்கான புதிய பணியிடம் விரைவில் ஒதுக்கப்பட உள்ளது என காவல்துறை தகவல்கள் தெரிவிக்கின்றன.