சென்னை: குற்றம் கூறுவதற்க்காகவே ஒரு கட்சியின் மாநில தலைவராக அண்ணாமலை செயல்படுகிறார், இதுவே அவரது நோக்கமாக இருக்கிறது என அமைச்சர் சேகர்பாபு குற்றம் சாட்டி உள்ளார்.

மிழகத்தில் இந்துக்களையும், இந்து திருக்கோயில்களையும் வைத்து அரசியல் செய்யலாம் என்பவர்களுக்கு ஏமாற்றம்தான் மிஞ்சி இருக்கிறது என தெரிவித்த அமைச்சர் சேகர்பாபு, இனத்தால் , மதத்தால் மக்களை பிரிக்கலாம் என்று நினைப்பவர்களின் ஆசை, நப்பாசையாக முடிவடைந்து இருக்கிறது என கூறினார்.

சென்னையில் நடைபெற்ற கோவில் தங்க நகைகள் உருக்கி, அதை தங்கக்கட்டிகளாக மாற்றி ஸ்டேட் பேங்கிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட பிறகு, செய்தியாளர்களை சந்தித்த   அமைச்சர் சேகர்பாபு,  கோயில்களில் பயன்பாட்டுக்கு உபயோகிக்க இயலாத பல மாற்று பொன் இனங்களில் இருந்து கற்கள், அரக்கு, அழுக்கு நீக்கப்பட்டு மும்பை உருக்காலைக்கு கொண்டு சென்று உருக்கி சுத்த தங்க கட்டிகளாக மாற்றுவதற்கு தங்க நகைகளை  வங்கியில் டெப்ாசிட் செய்கிறோம் என்றார்.

அதன்படி, சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த முத்துமாரி திருக்கோயில் இருந்து 11,494 கிலோ கிராமும், சிவகங்கை சமஸ்தான தேவஸ்தானத்தில் இருந்து 13,604 கிலோ கிராமும், ராமநாதபுரம் மாவட்டம் நாகநாத சுவாமி திருக்கோயிலில் இருந்து 12,235 கிலோ கிராமும் என 8 கோயில்களில் இருந்து ஒரு லட்சத்து 30 ஆயிரத்து 393 கிலோகிராம் எடை கொண்ட நகைகள் ஸ்டேட் வங்கியிடம் ஒப்படைக்கப்பட்டது என்று கூறினார். 8 திருக்கோவில்களில் பிரிக்கப்பட்ட பொன் இனங்கள் 130 கிலோ 393 கிராம் எடையுள்ள பொன் இனங்கள் மும்பைக்கு அனுப்பி வைக்கைபட்டுள்ளன. நகை பிரிக்கும் பணியில் எந்த விதமான சிறிய குற்றச்சாட்டும் , ஏமாற்றமும் ஏற்படாத வண்ணம் நடை பெற்றுக் கொண்டிருக்கிறது.

இந்த திட்டமானது அதிமுக ஆட்சியில் செயலிழந்து இருந்தது. ஆனால், திமுக ஆட்சிக்கு வந்ததும் மீண்டும் உயிர் பெற்றது. திருக்கோயிலின் பயன்பாட்டில் இல்லாத நகைகளை உருக்குதல் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. நகைகளின் வட்டி மூலம் வரும் வருவாய் திருக்கோயில்களின் தேவைகளுக்காக பயன்படுத்தப் பட்டு வருகிறது.

கோயில்களில் ரோப் கார் அமைப்பது தொடர்பான கேள்விக்கு பதில் அளித்த அவர், கோயில்களில் ரோப் கார் அமைக்கும்போது பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நேர்த்தியாகவும் கவனத்துடனும் செயல்பட வேண்டும்.

கடந்த ஆட்சியில் 50 சதவீத பணி கூட நிறைவடையாத சோழிங்கநல்லூரில் ரோப் கார் பணியை திறந்து வைத்தார்கள். எனவே சோழிங்கநல்லூர் ரோப் கார் வெகு விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு வரும் என கூறினார், கரூரில் உள்ள அய்யர்மலை ரோப் கார் பணியும் தொடர்ந்து விரைவுப்படுத்திக் கொண்டிருக்கிறோம், ஓரிரு மாதங்களில் அந்தப் பணியும் நிறைவு செய்யப்படும் என தெரிவித்தார்.

ஆன்மீக பக்தர்களுக்கு அனைத்து வசதிகளையும் ஏற்படுத்தக் கூடிய ஆட்சியாக திமுக ஆட்சி செயல்பட்டு வருகிறது. தொடர்ந்து பேசிய அவர், இந்தியாவிலேயே ஆன்மீகப் பணிகளில் முதலிடம் தர வேண்டும் என்றால் திராவிட மாடல் ஆட்சியில் தமிழ்நாட்டிற்கு தான் தர வேண்டும்.

குற்றம் கூறுவதற்காகவே ஒரு கட்சியின் மாநில தலைவராக அண்ணாமலை செயல்பட்டு வருகிறார் என விமர்சித்தார்.  திமுக ஆட்சியில் தான் கோவில்களின் 5084 கோடிக்கு சொத்துக்கள் ஆக்கிரமிப்புகளில் இருந்து மீட்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

இந்துக்களையும் இந்து திருக்கோயில்களையும் வைத்து அரசியல் செய்யலாம் என்பவர்களுக்கு ஏமாற்றம்தான் மிஞ்சி இருக்கிறது. இனத்தால் , மதத்தால் மக்களை பிரிக்கலாம் என்று நினைப்பவர்களின் ஆசை, நப்பாசையாக முடிவடைந்து இருக்கிறது என கூறினார்.