சென்னை: தன்மீதான வழக்கை தானாக எடுத்து விசாரிக்க உயர்நீதிமன்ற  நீதிபதி ஆனந்த் வெங்கடேசனுக்கு அதிகாரமில்லை என அமைச்சர் தங்கம் தென்னரசு மீதான வழக்கில், அவரது வழக்கறிஞர் கூறினார்.

அமைச்சர் தங்கம் தென்னரசு உள்பட சில அமைச்சர்கள்மீதான ஊழல் வழக்குகள் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், அதை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தாமாகவே வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டார். இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை தள்ளுபடி செய்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூடு,  இதுபோன்ற நீதிபதிகள் இருப்பதற்கு கடவுளுக்கு நன்றி என நீதிபதி வெங்கடேசை பாராட்டி இருந்தார்.

இந்த நிலையில்,  தன்மீதான வழக்கை விசாரிக்க நீதிபதி ஆனந்த் வெங்கடேசனுக்கு அதிகாரமில்லை என அமைச்சர் தங்கம் தென்னரசு  வழக்கறிஞர் வாதாடி இருப்பத சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழக  அமைச்சர் தங்கம் தென்னரசு. கடந்த 2006 முதல் 2011 வரையிலான மறைந்த கருணாநிதி தலைமையிலான  திமுக ஆட்சியில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சராக பதவி வகித்தார். அதன்பிறகு ஜெயலலிதா தலைமையில் அதிமுக அரசு அமைந்த நிலையில், தங்கம் தென்னரசு, அவரது மனைவி மணிமேகலைக்கு எதிராக வருமானத்திற்கு அதிகமாக 76.40 லட்சம் ரூபாய்க்கு சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்புப் பிரிவு 2012ஆம் ஆண்டு வழக்கு பதிவு செய்தது.

இந்த வழக்கு கடந்த பல ஆண்டுகளாக விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிப்புத்தூர் நீதிமன்றத்தில்  இழுத்தடிக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது திமுக ஆட்சிக்கு வந்த பிறகு,  வழக்கில் இருந்து தங்களை விடுவிக்கக் கோரி தங்கம் தென்னரசு தரப்பில் ஸ்ரீவில்லிப்புத்தூர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அரசியல் பழிவாங்கும் நோக்குடன் இந்த வழக்கு தங்கள் மீது போடப்பட்டுள்ளதாக தங்கம் தென்னரசு தரப்பில் குற்றம்சாட்டப்பட்டது.

இதனை விசாரித்த ஸ்ரீவில்லிப்புத்தூர்   நீதிமன்றம் தங்கம் தென்னரசு மற்றும் அவரது மனைவியை வழக்கில் இருந்து விடுவித்து உத்தரவு போட்டது. இது சலசலப்பை ஏற்படுத்தியது.

இதைத்தொட்ர்ந்து, சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேசன் தங்கம் தென்னரசு விடுவிக்கப்பட்டது தொடர்பான வழக்கை தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்தார். வழக்கு விசாரணை மோசமாக கையாளப்பட்டதாகவும் அவர் குற்றம்சாட்டினார். லஞ்ச ஒழிப்பு காவல்துறை பச்சோந்தி போல செயல்படுகிறது என்றும் கடுமையாக சாடியிருந்தார்.

இதனிடையே ஆனந்த வெங்கடேசன் மதுரை உயர் நீதிமன்றக் கிளைக்கு மாற்றப்பட்டதால் தற்போது இவ்வழக்கை நீதிபதி ஜெயச்சந்திரன்  விசாரித்து வருகிறார். இந்த வழக்கின் கடந்த விசாரணையின்போது,  அமைச்சர்களுக்கு எதிரான மறு ஆய்வு வழக்குகளை விசாரிக்க உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துவிட்டதாகக் குறிப்பிட்ட நீதிபதி வாதங்களை தொடங்க வேண்டும் என தங்கம் தென்னரசு தரப்புக்கு உத்தரவிட்டார்.

இந்த நிலையில் இவ்வழக்கு  நீதிபதி ஜெயச்சந்திரன் முன்பு  நவம்பர் 28ந்தேதி  மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது தங்கம் தென்னரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், “கீழமை நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில் எந்தவித சட்டவிரோதமும் இல்லை. அதேபோல தலைமை நீதிபதிதான் தாமாக முன்வந்து வழக்குகளை விசாரணைக்கு எடுக்க முடியும். அவ்வாறு இல்லையென்றால் தலைமை நீதிபதி உத்தரவிடும் நீதிபதிதான் வழக்கை தாமாக முன்வந்து விசாரிக்க முடியும்” என்று தெரிவித்தார்.

இதனை பதிவு செய்துகொண்ட நீதிபதி வழக்கை வரும் டிசம்பர் 8ஆம் தேதிக்கு தள்ளி வைத்தார். அன்றைய தினம் வழக்கு விசாரணைக்கு வரும்போது லஞ்ச ஒழிப்புத் துறை மற்றும் தங்கம் தென்னரசு தரப்பில் கூடுதல் வாதங்கள் வைக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.