சென்னை

சென்னை உயர்நீதிமன்றம் செங்கல்பட்டு என்கவுண்டர் குறித்து சிபிசிஐடி விசாரிக்க வேண்டும் என  உத்தரவிட்டுள்ளது.

கடந்த மாதம் 1 ஆம் தேதி சென்னை அடுத்த கூடுவாஞ்சேரி காரணை புதுச்சேரிப் பகுதியில் வினோத் என்ற சோட்டா வினோத், மற்றும் ரமேஷ் என்ற இரண்டு ரவுடிகள் காவல்துறையினரால் என்கவுண்டரில் கொல்லப்பட்டனர். சோட்டா வினோத்தின் தாயார் ராணி  இந்த என்கவுண்டர் குறித்து சிபிசிஐடி விசாரிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார்.

அவர் தனது மனுவில், சம்பவத்தன்று வினோத் மற்றும் அவரது நண்பர் ரமேஷ் இருவரும் சிறுசேரியில் உள்ள ஹோட்டலில் தங்கியிருந்ததாகவும்  அங்கு வந்த காவல்துறையினர் இருவரையும் ஹோட்டலில் இருந்து அழைத்துச் சென்று என்கவுண்டரில் கொன்றதாகவும் இது ஒரு போலி என்கவுண்ட்டர் எனவும் குற்றம்சாட்டியுள்ளார்.

மேலும் இது குறித்து செங்கல்பட்டு மாஜிஸ்ட்ரேட் விசாரணை மற்றும் சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட வேண்டுமெனவும் மனுவில் கோரிக்கை வைத்துள்ளார்.

இன்று  இந்த வழக்கு நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வந்தது. விசாரணையின் போது காவல்துறை என்கவுண்டர், லாக் அப் மரணம் உள்ளிட்டவை குறித்து சிபிசிஐடி விசாரிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் கூறியுள்ளதாக மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

எனவே இந்த என்கவுண்டர் சம்பவம் தொடர்பான வழக்கின் விசாரணையை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றிய நீதிபதி, டி.எஸ்.பி அந்தஸ்து அதிகாரி விசாரணை நடத்த வேண்டும் எனவும் உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை அக்டோபர் 10ஆம் தேதிக்குத் தள்ளிவைத்தார்.